search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
    X

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

    • எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர்.
    • நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடிக்க சென்றனர்.

    ஆனால் கடந்த வாரம் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 22-ந்தேதி புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நெடுந் தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ஜெகதாபட்டினம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 22 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கையை வலியுறுத்தி மண்டபம் பகுதியில் உள்ள கோவில்வாடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதன் காரணமாக மண்டபம் இறங்குபிடி தளத்தில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

    கடந்த 22-ந்தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்களும் அடங்குவர். மண்டபம் பகுதி மீனவர்கள் உள்பட 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதனை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் பின்பும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×