search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகாளய அமாவாசை: கடலில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
    X

    மகாளய அமாவாசை: கடலில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

    • மகாளய அமாவாசையயொட்டி இன்று அதிகாலை 4-30 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது.
    • கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டு புரட்டாசி மாத மகாளய அமாவாசை இன்று கடை பிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள். அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள்.

    அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பைபுல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டு விட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். மகாளய அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் மாலை வரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தார்கள்.

    மகாளய அமாவாசையயொட்டி இன்று அதிகாலை 4-30 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற பூஜைகள் நடந்தது.

    மகாளய அமாவாசையையொட்டி காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. வடக்கு பிரதான நுழைவு வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    மகாளய அமாவாசையையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும் இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்கிறார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதன் பிறகு அத்தாழபூஜை யும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    Next Story
    ×