search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரத்யேக நீச்சல்குளம் அமைத்து  ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி
    X

    பிரத்யேக நீச்சல்குளம் அமைத்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

    • கிராமங்களில் காளைகளை தயார்படுத்தும் பணியிலும், காளைகளை அடக்குவதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
    • கடந்த முறை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும்.

    திண்டுக்கல்:

    பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தயார்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு விழா பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகையில் தொடங்கி அதன்பிறகு தொடர்ச்சியாக பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காக கிராமங்களில் காளைகளை தயார்படுத்தும் பணியிலும், காளைகளை அடக்குவதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை அடிவாரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து அதனை பராமரித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் இவர் தற்போது மரக்காளை, வீறிக்கொம்பு காளை, செவலக்காளை என 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.


    இந்த காளைகளின் உடல் வலிமைக்காக தவிடு, உளுந்தம்குருணை, பருத்திவிதை, புண்ணாக்கு, பேரிச்சம்பழம் போன்ற ஊட்டச்சத்து உணவுகளை தினந்தோறும் வழங்கி வருகிறார். இதுதவிர காளைகளுக்கு நடைபயிற்சி, நீச்சல்பயிற்சி, ஓட்டப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் தனது ஜல்லிக்கட்டு காளைகளுக்காகவே தோட்டத்தில் பிரத்யேகமாக பெரியஅளவில் நீச்சல் குளத்தை கட்டி வைத்துள்ளார்.

    அந்த காளைகளுக்கு மாடுபிடிவீரர்களை வைத்து சிறந்த முறையில் பயிற்சியும் அளித்து வருகிறார். தினந்தோறும் ஜல்லிக்கட்டு காளையுடன் மாடுபிடி வீரர்கள் அடக்க முற்படுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காளையின் உரிமையாளர் முருகன் தெரிவிக்கையில், இந்த 3 காளைகளையும் எனது குழந்தைகள் போல்தான். எனது குழந்தைகள் தினந்தோறும் சாப்பிட்டார்களா, நல்ல முறையில் விளையாடுகிறார்களா என்பதை கண்காணிப்பதை போல இந்த காளைகளையும் கவனித்து வருகிறேன்.

    ஜல்லிக்கட்டு போட்டியின் போது திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் சென்று எனது காளைகள் பரிசுகளை பெற்று வந்துள்ளன. எந்தவித பிரதிபலனும் இல்லாமல் நான் வளர்க்கும் காளைகளை ஜல்லிக்கட்டில் துள்ளிவிளையாடும்போது அந்த மகிழ்ச்சியே எனக்கு போதுமானது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து மாடுகளும் போட்டியில் பங்கேற்க முடியும்.

    மாடுகள் போட்டியில் கலந்து கொள்ள டோக்கன்முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதேபோல ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கும் முன் காளைகளின் உரிமையாளர்களின் கருத்துகளையும் கேட்டறியவேண்டும் என்றார்.

    Next Story
    ×