search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூரில் 5-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: தீயணைப்பு வீரர்கள் கூடுதலாக வரவழைப்பு
    X

    குன்னூரில் 5-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: தீயணைப்பு வீரர்கள் கூடுதலாக வரவழைப்பு

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.
    • தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக இரவு வேளையில் அதிக பனிப்பொழிவும், பகல் வேளையில் அதிக வெயிலும் காணப்படுவதால் காட்டுக்குள் இருக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.

    குன்னூர் அடுத்த பாரஸ்ட்டேல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பாரஸ்ட்டேல் தோட்டத்தில் எரிக்கப்பட்ட குப்பையில் இருந்த தீக்கங்குகள் காற்றில் பறந்து காட்டு ப்பகுதிக்குள் விழுந்தன. தொடர்ந்து குன்னூர் காட்டுப்பகுதிகளில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுதொடர்பாக தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் குன்னூர் தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டு வந்து குன்னூர் காட்டுக்குள் பற்றியெரிந்த காட்டு த்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    குன்னூர் காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த வனத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் சிரமப்பட்டு வந்ததால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.

    இதற்கிடையே குன்னூர் வனத்துக்குள் கொளுந்து விட்டெரிந்த காட்டுத்தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் வனத்துக்குள் பற்றிஎரியும் தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்புத்துறையினருக்கு பெருத்த சிரமம் ஏற்பட்டது.

    இதற்கிடையே குன்னூர் காட்டுப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற பழமையான மரங்கள் செடி-கொடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் ஆகியவை தீயில் கருகி நாசமாயின.

    அதுவும் தவிர பாரஸ்ட்டேல் பகுதியில் மான், முயல் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் சுற்றி திரிந்து வந்தன.

    குன்னூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் அந்த பகுதியில் வசித்த வன விலங்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.

    இதற்கிடையே குன்னூர் காட்டுத்தீயின் பாதிப்புகள் குறித்து அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா நேற்று மாலை உடனடியாக சம்பவ இடத்திற்கு புறப்பட்டு வந்தார். தொடர்ந்து அவர் பாரஸ்ட் டேல், வண்டிச்சோலை பகுதியில் முகாமிட்டு வனத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் குன்னூரில் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணைப்புப்படை போலீசாரை வரவழைப்பது என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்புப்படை ஊழியர்கள் சம்பவ இடத்தில் கா ட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    இதற்கிடையே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குப்பைகளை எரித்தபோது அலட்சியமாக செயல்பட்டதாக தோட்ட உரிமையாளர் உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குன்னூர் காட்டுப்பகுதியில் கடந்த 5 நாட்களாக பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

    இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் வண்டிச் சோலை, பாரஸ்ட்டேல் பகுதியில் இருந்த வன விலங்குகள் தற்போது இடம்பெயர்ந்து கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு சென்று நடமாடி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவும் காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×