search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: தேர்தல் தேதிக்கு முன்னதாக அறிவிப்பு?
    X

    பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: தேர்தல் தேதிக்கு முன்னதாக அறிவிப்பு?

    • பாஜக நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது.
    • பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றன.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ளனர். பா.ஜ.கவும் தேர்தல் பணியை தமிழகத்தில் தீவிரப்படுத்தி உள்ளது.

    கடந்த முறையை விட இந்த முறை தங்களது வாக்கு வங்கியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதுடன், தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வகையில் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகிகளுடனான மத்திய குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்றார். மத்திய மந்திரி எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், எச்.ராஜா, கே.டி.ராகவன், ஜி.கே.நாகராஜ், கரு.நாகராஜன் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குறிப்பாக பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியதை அடுத்து, தங்கள் கூட்டணியில் எந்தெ ந்த கட்சிகளை சேர்க்கலாம். யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். தமிழகத்தில் நமக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என பல்வேறு விஷயங்களை தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கேட்டறிந்தார்.

    மேலும் நமக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? தேர்தல் அறிக்கையை எப்படி தயாரிப்பது? அதில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வைக்கலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டார். அவர்களும் பல்வேறு கருத்துக்களை தேசிய அமைப்பு பொதுச்செயலாளரிடம் தெரிவித்தனர்.

    நிர்வாகிகள் கூறிய அனைத்து கருத்துக்களையும் கேட்டு கொண்ட தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பாராளுமன்ற தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள் என கூறியதோடு, வெற்றிக்கான சில வழிகளையும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொகுதி வாரியாகவும், வார்டு வாரியாகவும் சென்று கட்சியினர் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். அவர்களிடம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறி வாக்குகளை சேகரியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

    மக்களிடமும் அவர்களுக்கு ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டு, அதனை உடனே நிறைவேற்று வதற்கான நடவடிக்கையும் எடுங்கள். அடிக்கடி மக்களை சந்தித்து கொண்டே இருங்கள்.

    வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் அந்தந்த நிர்வாகிகள் தங்கள் முழு பலத்தையும் இறக்கி தேர்தல் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தாக தெரிகிறது.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் எனவும் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதிலும் குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்தில் போட்டியிடக் கூடிய முக்கிய வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு விகிதத்தை அதிகரிக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் பா.ஜ.க கோவை, நீலகிரி உள்பட பல்வேறு தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணியாற்றி வருகிறது. குறிப்பாக நீலகிரி தொகுதியில், மத்திய மந்திரியாக இருக்க கூடிய எல்.முருகன் போட்டியிட உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் எல்.முருகனும், நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முகாமிட்டு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மக்களையும் அடிக்கடி சந்தித்து வருகிறார்.

    இதையெல்லாம் பார்க்கும் போது, அவர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    நேற்று நடந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் விரைவில் முதற்கட்ட வேட்பாளர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அந்த பட்டியலில் மத்திய மந்திரி எல்.முருகனின் பெயர் உள்பட இன்னும் சில முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×