என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கைது
காதல் விவகாரத்தில் பிளஸ்-2 மாணவனுக்கு கத்திக்குத்து- பெண் கைது
ஈரோடு சூரம்பட்டியில் காதல் விவகாரத்தில் மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து 3 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சவுந்தர். இவர் அதே பகுதியில் சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது அண்ணன் சீனிவாசன் (20).
சலூன் கடை அருகே சிவா என்பவர் மருந்து கடை வைத்துள்ளார். இந்த கடையில் ஈரோடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த அன்பரசு (18) என்ற பிளஸ்-2 மாணவர் மாலை நேரத்தில் பள்ளி முடிந்த பிறகு மருந்து கடையை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் மருந்து கடைகாரர் சிவாவுக்கும், சவுந்தருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. சிவாவுக்கு ஆதரவாக மாணவர் அன்பரசு இருந்து வந்தார். இதனால் சவுந்தர் கோபம் அன்பரசு மீது திரும்பியது. மேலும் சவுந்தர் சூரம்பட்டியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் மாணவி வீட்டுக்கு தெரிந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதை தொடர்ந்து மாணவி குடும்பத்தினர் அந்த பகுதியில் இருந்து வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு சென்று விட்டனர். இதற்கு அன்பரசு தான் காரணம் என சவுந்தர் நினைத்து தனது அண்ணன் சீனிவாசனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து நேற்று மாலை சீனிவாசன், சவுந்தர், அவர்களது தாய் லதா மற்றும் சவுந்தரின் நண்பர் ராம் ஆகியோர் அன்பரசுவிடம் இது குறித்து கேட்டனர். அப்போது சீனிவாசன் மாணவர் அன்பரசு முதுகில் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அன்பரசு மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் காயமடைந்த மாணவர் அன்பரசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லதாவை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது மகன்கள் சவுந்தர், சீனிவாசன் மற்றும் வாலிபர் ராம் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story






