search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நலத்திட்ட உதவி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    நலத்திட்ட உதவி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    50,721 தொழிலாளர்களுக்கு ரூ.12.35 கோடி நலத்திட்ட உதவி- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    சென்னை:

    தமிழ அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நெய்வேலியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 3 கோடியே 84 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் பணிமனைக் கட்டடங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம், செம்போடை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பாரத் பெட்ரோலியம் கார்பரே‌ஷன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து 8 கோடியே 18 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், பணிமனைக் கட்டடங்கள் மற்றும் விடுதிக் கட்டடங்கள்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடி, அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 9 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று விடுதிக் கட்டடங்கள், என மொத்தம் 21 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மு.கஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடிகளுக்கான உதவித்தொகை, மாதாந்திர ஓய்வூதியத் தொகை, இயற்கை மற்றும் விபத்து மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 31,428 பயனாளிகளுக்கு ரூ.6,35,64,950, மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகையாக 17,338 பயனாளிகளுக்கு ரூ.1,78,98,000, இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்கு உதவித்தொகையாக 1659 பயனாளிகளுக்கு ரூ.3,92,31,500, திருமண உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, குடும்ப ஓய்வூதிய உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை என மொத்தம் 50,721 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 12 கோடியே 35 லட்சத்து 20 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு முதல்- அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×