search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

    அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தது.

    இந்த வாக்குறுதியை நம்பி போக்குவரத்துத் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் தி.மு.க.விற்கு வாக்களித்தனர். அவர்களுடைய வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க. அதனை நிறைவேற்றாதது மன வருத்தத்தை அளிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறிவிட்டு, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை கூட வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது அவர்களை ஆற்றொணாத் துயரத்தில் தி.மு.க. ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் ஏளனமாகப் பேசுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

    அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகளில் முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    இது ஒருபுறமிருக்க, மதுரையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்து ஆரப்பாளையத்தல் இருந்து கிளம்பி காளவாசல் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த தனியார் வாகனத்திற்கு வழி கொடுக்க இயலாத நிலையில், ஆத்திரமடைந்த தனியார் வாகன ஓட்டுநர் அரசுப் பேருந்தை முந்திச் சென்று மறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கி கைகளில் ரத்தக் காயத்தை ஏற்படுத்தியதாக செய்தி வந்துள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

    அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், கடன் சுமையை குறைப்பதிலும், சிக்கனத்தைக் கடைபிடிப்பதிலும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்களை வழங்குவதிலும், அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்குவதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது மெத்தனமாக அரசு செயல்படுகின்றது. சட்டம்-ஒழுங்கும் சீரழிந்து கொண்டிருக்கிறது.

    அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு.

    எனவே, முதல்-அமைச்சர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர விசாரித்து, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஓய்வூதியப் பயன்கள், ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்கும், முறைகேடுகளைக் களையவும், கடன் சுமையை குறைக்கவும் உதிரி பாகங்கள் வாங்க நிதி ஒதுக்கவும், இலவசப் பயணம் காரணமாக நடத்துனர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடுகட்டவும், சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்ய வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×