search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரசம்ஹாரம்
    X
    சூரசம்ஹாரம்

    பக்தர்கள் இன்றி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது

    திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர். இங்கு முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். சூரபத்மனை வென்று தேவர்களைக் காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 4-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. 

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான இன்று நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் யாகசாலையில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. 

    இதையடுத்து, மதியம் 2.45 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவில் கடற்கரை முகப்பிற்கு வந்தான். மாலை 4.55 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி சூரபத்மனை வதம் செய்வதற்காக கடற்கரை முகப்பில் எழுந்தருளினார்.

    முதலில் மாயையே உருவாக கொண்ட யானை முகனான தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போர் புரிவதற்காக ஆக்ரோஷமாக தலையை ஆட்டியவாறு வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே நின்று போரிட தயாரானான். மாலை 5.13 மணிக்கு தாரகாசூரனை வேல் கொண்டு முருகபெருமான் வதம் செய்தார்.
    தொடர்ந்து கன்மமே உருவான சிங்கமுகாசூரனும்   முருகபெருமானுடன் போரிடுவதற்காக உக்கிரத்துடன் வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை வலம் வந்து நேருக்கு நேர் போர் புரிய தயாரானான். மாலை 5.22 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் வதம் செய்தார்.

    சகோதரர்களின் இழப்பால் ஆத்திரம் அடைந்த ஆணவமே உருவான சூரபத்மனும் தனது படைவீரர்களுடன் முருகபெருமானுடன் போரிட வேகமாக வந்தான்.  முருகபெருமானை 3 முறை சுற்றி போரிட வந்த சூரபத்மனையும் மாலை 5.30 மணிக்கு சுவாமி வேல் எடுத்து சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன் 3 முறை சுற்றி வந்து வட்டமிட்டது.

    இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி தன்னுடன் ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார்.

    சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    திருவிழாவின் 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) இரவு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இன்றும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை.
    Next Story
    ×