search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி
    X
    மாநகராட்சி

    அதிமுக-திமுக இடையே கடுமையான போஸ்டர் யுத்தம்- சுவர்களை மீட்க மாநகராட்சி தீவிரம்

    அதிமுக.வினரும், திமுக.வினரும் சுவர் விளம்பரங்களில் ஆர்வம் காட்டும் நிலையில் அதிகாரிகள், அரசு சுவர்களை மீட்கும் முயற்சியில் அக்கறை காட்ட தொடங்கியுள்ளனர். சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கான பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

    சென்னை:

    சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரங்களை செய்வதிலும், போஸ்டர்களை ஓட்டுவ திலும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.

    மக்களை கவரும் வகையிலான வாசகங்களை எழுதுவதிலும் அதனை போஸ்டர்களாக அச்சிட்டு ஓட்டுவதிலும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே சளைத்தவை அல்ல.

    அரசு மற்றும் தனியார் சுவர்களில் சுவர் விளம்பரம் செய்வதில் 2 கட்சிகளுமே போட்டி போட்டுக் கொண்டு யுத்தம் நடத்தி வருகின்றன. பல இடங்களில் மேம்பால சுவர்கள், தனியாருக்கு சொந்தமான நீளமான சுவர்கள் ஆகியவற்றில் இடம் பிடித்து வைத்துள்ளனர்.

    இதுபோன்ற சுவர்களில் ‘ரிசர்வ்’ என்று கொட்டை எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வினர் எழுதி வரும் சுவர் விளம்பரங்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். ‘மீண்டும் அம்மா ஆட்சி’ என்கிற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவர் விளம்பரங்களை பல இடங்களில் காண முடிகிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பச்சை நிற துண்டோடு, வயலில் நிற்கும் புகைப் படங்களை போட்டே அ.தி.மு.க.வினர் சுவரொட்டிகளை அதிகமாக அச்சடித்து ஓட்டுகிறார்கள்.

    அதேபோன்று தி.மு.க. வினரும் போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரங்களை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டு வருகிறார்கள். மீண்டும் கலைஞர் ஆட்சி மலர உதயசூரியனுக்கு வாக்களிப்போம் என்கிற வாசகங்கள் சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பளிச்சிடுகின்றன.

    தி.மு.க.வினர் அச்சிடும் போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களில் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது பெயர்களும், புகைப் படங்களும் பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. இப்படி அ.தி.மு.க.வினரும், தி.மு.க. வினரும் சுவர் விளம்பரங்களில் ஆர்வம் காட்டும் நிலையில் அதிகாரிகள், அரசு சுவர்களை மீட்கும் முயற்சியில் அக்கறை காட்ட தொடங்கியுள்ளனர். சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கான பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

    அரசு சுவர்கள், பெரிய மேம்பாலங்களில் போஸ்டர்கள் ஓட்டுவதற்கும், விளம்பரங்கள் செய்வதற்கும் ஏற்கனவே தடை உள்ளது.

    அதே நேரத்தில் தனியாருக்கு சொந்தமான சுவர்களிலும் அனுமதியின்றி போஸ்டர் ஓட்ட தடை இருக்கிறது. இப்படி தடையை மீறி போஸ்டர்கள் ஓட்டுபவர்கள் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

    1959-ம் ஆண்டு போடப்பட்ட இந்த சட்டத்தை முழுமையாக பின்பற்றுவதற்கு சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் தீவிரம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள்.

    தற்போது அரசுக்கு சொந்தமான சுவர்களில் செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நகர்புறங்களில் சுவர் விளம்பரங்கள் செய்வதற்கு ஏற்கனவே தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது. கிராமப்புறங்களில் மட்டும் அனுமதி பெற்று சுவர் விளம்பரங்களை வரைந்து கொள்ளலாம். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு சுவர்களை மீட்கும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×