என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் கண்ணாடி துண்டால் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் மாரப்ப 3-வது வீதியில் பீரோ பட்டறை தொழிற்சாலை உள்ளது.
இங்கு 15-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 6 பேர் வெளியூர்களை சேர்ந்தவர்கள். இவர்கள் அங்கு தனி அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அங்கு தங்கி பணிபுரிந்த ஊழியரில் ஒருவர் குமரி மாவட்டம் தக்கலை முத்தலை குறிச்சியை சேர்ந்த பூபேஸ் (வயது 52).
இந்த நிலையில் இன்று காலை பூபேஸ் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது அருகே கண்ணாடி துண்டு ஒன்று கிடந்தது. இந்த கண்ணாடி துண்டால்தான் அவரது கழுத்து அறுக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் விரைந்தனர். அங்கு மர்மமாக இறந்து கிடந்த பூபேஸ் உடலை பார்வையிட்டனர். பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையை பூபேஸ் கண்ணாடி துண்டால் தனது கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் அவரது சாவில் மர்மம் ஏதும் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்து கிடந்த இடத்தில் கைரேகை நிபுணர் வரவழைக்கபட்டு ரேகைகளை பதிவு செய்தார்.






