search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டையில் டாக்டர் ராமதாஸ் பேசிய காட்சி.
    X
    ராணிப்பேட்டையில் டாக்டர் ராமதாஸ் பேசிய காட்சி.

    பொய் சொல்பவர்களை நம்பி வாக்களிக்காதீர்கள்- டாக்டர் ராமதாஸ் பேச்சு

    பொய் சொல்பவர்களை நம்பி வாக்களிக்காதீர்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டதையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    தமிழகத்திலேயே மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை மக்கள் நலனுக்காகவும் நிர்வாக வசதிக்காகவும் மூன்றாக பிரிக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம்.

    அப்போதைய முதல் அமைச்சர்கள் செய்யவில்லை. இப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்திருக்கிறார். அவருக்கு பா.ம.க. சார்பில் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.

    வேலூர் மாவட்டம் கருப்பு மாவட்டமாக முத்திரையிடப்பட்டது.

    விவசாயம் போச்சு, பாலாறு வறண்டு விட்டது. ஆந்திரா மாநிலத்தில் தடுப்பணை கட்டி அவர்கள் நீர் தேக்கி கொண்டனர்.

    பா.ம.க. சார்பில் போராட்டங்கள் செய்தோம். நானும் 7 நாள் போராட்டத்தில் ஈடுபட்டேன். வேறு எந்த கட்சியும் செய்யவில்லை பா.ம.க. தான் அதை செய்துள்ளது. மற்ற கட்சிகள் ஓட்டுக்கும் ஆட்சிக்கும் மட்டும்தான் கவலைப்படுவார்கள் பா.ம.க. தான் மக்களை பற்றிய கவலை எப்போதும் இருக்கிறது.

    மக்கள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் நகைக்கடன், பயிர்கடன், கல்விக்கடன் என்று பல்வேறு பொய் சொன்னவர்களுக்கு வாக்களித்தனர். நமக்கு வாக்களிக்கவில்லை.

    மக்கள் ஏன் பொய் சொல்பவர்களை நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. மக்களுக்காக இட ஒதுக்கீடு கல்வி என்று பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி மக்களின் நலனை எப்போதும் கனவு காணும் எங்களுக்கு மக்கள் ஓட்டு போடவில்லை.

    இலவசத்திற்காக மக்கள் விலைமதிக்க முடியாத ஓட்டை தேர்தல் நேரத்தில் சரியாக பயன்படுத்தவில்லை. மக்கள் சிந்திக்க வேண்டும்.

    23 லட்சம் இளைஞர்கள் வாக்களித்தார்கள். அவர்கள் குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, தங்கை இவர்களிடம் பா.ம.க. செய்த நல்ல திட்டங்களை வரலாற்றை சொல்லி இருந்தால் மாம்பழத்திற்கு ஓட்டு வந்திருக்கும்.

    நான் நினைத்திருந்தால் எத்தனையோ பதவிக்கு போயிருக்கலாம். ஆனால் இன்றைக்கும் மக்களுக்காக உழைத்து வருகிறேன். முதுமையில் கூட கோல் ஊன்றி உங்களுக்காக போராடுவேன். எங்களை நம்பி வாருங்கள் கல்வி, விவசாயம் பெருகும், சுகாதாரம் இருக்கும் எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்.

    எங்களுக்கு அடுக்கு மொழியில் பேசத் தெரியாது. நாங்கள் கோடம்பாக்கத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. எங்களுக்கு பொய் பேசத் தெரியாது. நாங்கள் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள். விவசாய பிள்ளைகள். நாங்கள் பொய் சொல்ல மாட்டோம். பசியென்று வந்தவர்களுக்கு சோறு போட்டு நாங்கள் பட்டினியாக இருப்போம். அப்படிப்பட்ட வம்சத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள்.

    மக்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்தவில்லை. வேலூர் மாவட்டத்தை முன்னேற்றம் செய்ய மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தியவன் இந்த ராமதாஸ்.

    எங்கள் கட்சிக்காரர்களுக்கு எப்போதுமே முகத்தில் சோர்வு தெரியாது. ஏனென்றால் எப்போதுமே மக்களோடு மக்களாக இருக்கிறார்கள்.

    மக்கள் யோசித்து அவர்களின் விலை மதிக்க முடியாத வாக்கை சரியாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×