என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீடுகள்
    X
    கொள்ளை நடந்த வீடுகள்

    பள்ளிகொண்டா அருகே ராணுவ வீரர், சி.ஆர்.பி.எப், இன்ஸ்பெக்டர் வீடுகளில் கொள்ளை

    பள்ளிகொண்டா அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர், சி.ஆர்.பி.எப், இன்ஸ்பெக்டர் வீடுகளில் 54 பவுன் நகை, பணம் கொள்ளை போனது.

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி, காலபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (62). மத்திய ரிசர்வ் படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார்.

    இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம கும்பல் வீட்டின் இரும்பு கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டிலிருந்த 4 பீரோக்களை உடைத்தனர். அதிலிருந்த தங்க செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட 21 பவுன் தங்க நகை மற்றும் தினகரன் பென்சன் வாங்கி வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    தினகரனின் எதிர்வீட்டில் வசிப்பவர் ராஜாராம் (67), முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன்கள் சென்னையில் என்ஜீனியர்களாக உள்ளனர்.

    ராஜாராம் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றிருந்தார்.

    தினகரனின் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் ராஜாராம் வீட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 33 பவுன் தங்க நகைகள் ரூ.55 ஆயிரம் பணத்தை அள்ளி சென்றுவிட்டனர்.

    திருட்டு கும்பல் வெளியேறும் போது 2 வீடுகளின் கதவுகளை அடைத்துவிட்டு சென்று விட்டனர். இதனால் அந்த தெருவில் இருந்தவர்களுக்கு கொள்ளை நடந்தது தெரியவில்லை.

    நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது ராணுவ வீரர் ராஜாராம் வீட்டின் கதவு திறந்து பயங்கர சத்தத்துடன் அடித்தது. அப்போதுதான் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கொள்ளை நடந்ததை அறிந்தனர்.

    இதுபற்றி இருவருக்கும் தகவல் தெரிவித்தனர். மகன்களுடன் ராஜாராம், தினகரன் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தனர். இதுபற்றி பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த கொள்ளையில் வடமாநில கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×