search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியபோது எடுத்த படம்.
    X
    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியபோது எடுத்த படம்.

    மக்களுக்கு பின்னால் திமுக-கூட்டணி கட்சியினர் நிற்போம்: கனிமொழி எம்.பி. பேச்சு

    தூத்துக்குடி மக்களுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்திட முடியாது என்றும் மக்களுக்கு பின்னால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் நிற்போம் என்றும் கனிமொழி எம்.பி.பேசினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தூத்துக்குடி மக்களின் உரிமைகளுக்காக, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நிச்சயமாக தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

    இங்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வரமுடியுமோ அதற்கு நிச்சயமாக பாடுபடுவேன். இங்கு மிக முக்கியமாக இருக்கக் கூடியது தண்ணீர் பிரச்சனை. தண்ணீர் இல்லாத நேரத்தில் குளங்களை தூர்வார வேண்டியது முக்கியமானது. இந்த பிரச்சனையை தீர்க்கும் முயற்சியை முன்னெடுப்போம். அதனை தாண்டி மக்கள் பிரச்சனைகள் பல உள்ளன.

    தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். எல்லோரையும் அரவணைத்து கொண்டு, இந்தியா என்பது எல்லோருக்கும் சொந்தம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தை உருவாக்கி நடத்த வேண்டும். இந்த முறையாவது மகளிர் மசோதாவை கொண்டுவர வேண்டும். பொருளாதாரத்தில் இருக்கும் சரிவு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் உள்ள தலைவர்களின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் போல்பேட்டை கிழக்கு, மேற்கு, நந்தகோபாலபுரம், செல்வநாயகபுரம், சக்தி விநாயகர்புரம், அழகேசபுரம், அம்பேத்கர் நகர், சுந்தரவேல்புரம், கிருஷ்ண ராஜபுரம், பொன்னகரம், முத்துகிருஷ்ணாபுரம், பூபால்ராயர்புரம், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், முருகன் தியேட்டர், லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, திரேஸ்புரம், குரூஸ்புரம், மட்டக்கடை, எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட், 2-ம் கேட், சிவன் கோவில் தெரு, ரங்கநாதபுரம், பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், கே.வி.கே.நகர், அண்ணாநகர் பகுதிகளில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:-

    எத்தனையோ எதிர்ப்புகள், அச்சுறுத்துதல்கள், மிரட்டல்களுக்கு மத்தியில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை தி.மு.க கூட்டணிக்கு தந்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் தனித்துவமான வெற்றியை பெற்று உள்ளது. தமிழகத்தில் சுமூகமான சூழ்நிலையை, நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம்.

    ஆனால் அவர்கள் தோல்வியடைந்த பின்பும் மக்களை மிரட்டுகின்றனர். என்னுடைய தோல்விக்காக வருத்தப்படுவீர்கள் என்று அச்சுறுத்தும் வகையில் பேசுகின்றனர். தூத்துக்குடி மக்களுக்கு எந்த தீங்கையும் அவர்கள் ஏற்படுத்திட முடியாது. மக்களுக்கு பின்னால் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் நிற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×