search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயர்ந்து தூங்கிய மன்சூர்அலிகானை காண திரண்ட பொதுமக்கள்.
    X
    அயர்ந்து தூங்கிய மன்சூர்அலிகானை காண திரண்ட பொதுமக்கள்.

    அரசு பள்ளி மரத்தடியில் தூங்கிய மன்சூர் அலிகான்

    பெரியமுளையூர் பகுதியில் வாக்கு சேகரித்த மன்சூர்அலிகான், உண்ட களைப்பினாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து அதனால் ஏற்பட்ட சோர்வினாலும் அங்கிருந்த அரசு பள்ளி மரத்தின் அடியில் அயர்ந்து தூங்கினார். #MansoorAlikhan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுக்கிறார். இதற்காக திண்டுக்கல் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரோட்டா செய்வது, டீ போடுவது, டயருக்கு பஞ்சர் ஒட்டுவது, துணிகளை அயன் செய்வது, குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது என விதவிதமான யுக்திகளில் பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார்.

    இன்று திண்டுக்கல் அருகே உள்ள கோபால்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார். இவர் ஒத்தக்கடை பகுதியில் சாலையோரம் தென்னை நார் திரிக்கும் பெண் தொழிலாளர்களிடம் வேலை எப்படி போகிறது, கிடைக்கிற வருமானம் போதுமானதாக உள்ளதா? வேறு ஏதும் பிரச்சனைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். வேலாதயும்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் போது ஒரு வீட்டில் வளைகாப்பு நடைபெற்றது. அங்கு சென்ற நடிகர் மன்சூர்அலிகான் கர்ப்பிணியை வாழ்த்தி ஆசீர்வதித்தார். பின்னர் கலவை சாதத்தை விரும்பி வாங்கி சாப்பிட்டார்.

    அதன்பின்னர் பெரியமுளையூர் பகுதியில் வாக்கு சேகரித்தபோது உண்ட களைப்பினாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து அதனால் ஏற்பட்ட சோர்வினாலும் அங்கிருந்த அரசு பள்ளி மரத்தின் அடியில் அயர்ந்து தூங்கினார்.

    அப்போது அவ்வழியாக வந்த சிறுவர் சிறுமிகள் கேப்டன் பிரபாகரன் படத்தில் வந்த மன்சூர்அலிகானின் வீரபத்திரன் கதாபாத்திரத்தை நினைவில் கொண்டு நம்ம ஊருக்கு வீரபத்திரன் வந்துள்ளார் என ஆர்வமாக சத்தம்போட்டுக் கொண்டே சென்றனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் மன்சூர்அலிகானை காண திரண்டனர். குழந்தைகளிடம் நன்றாக படிக்க வேண்டும் என்றார். பொதுமக்களிடம் நல்ல வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் என கூறி சென்றார். #Loksabhaelections2019 #MansoorAlikhan

    Next Story
    ×