என் மலர்
செய்திகள்

எங்கள் கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசம்- பிரேமலதா பேட்டி
பனப்பாக்கம்:
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் கோவிலை சுற்றி வலம் வந்து வணங்கினார்.
அதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் தொகுதி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி உறுதியாக அமையப்போகிறது. நான் இதுவரை 10 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்துள்ளேன். செல்லும் இடங்களெல்லாம் எங்கள் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பது தெரிகிறது.
தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளின் தூண்டுதல் எதுவுமில்லை. இதற்கு முன்பு தலைமை செயலாளர் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. அவருடைய தேர்தல் பிரசாரம் குறித்து கட்சி தலைமை அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிழக்குமாவட்ட செயலாளர் நித்யா உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.






