search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லலிதா.
    X
    லலிதா.

    மகளிர் குழு கடனுக்காக அவமானப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை

    மயிலாடுதுறையில் மகளிர் குழு கடனுக்காக அவமானப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை வேதன் பிள்ளை காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). கொத்தனார். இவரது மனைவி லலிதா (28). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் சுரேஷ், அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இதனால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வாராம்.

    இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தனியார் மகளிர் குழு நிறுவனத்திடம் லலிதா ரூ.30 ஆயிரம் கடன் பெற்றதாக தெரிகிறது.

    இதற்கிடையே கணவர் சுரேசுக்கு , கடந்த சில நாட்களாக வேலை சரிவர இல்லாததால் வருமானம் இல்லாமல் இருந்து வந்தார். இதனால் மகளிர் குழுவுக்கு கட்ட வேண்டிய கடன் தவணையை லலிதாவால் கட்டமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் நேற்று மகளிர் குழுவை சேர்ந்த சிலர் , லலிதா வீட்டுக்கு வந்தனர். கடன் தவணை பணம் கட்டாததால் லலிதாவை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

    பிறகு அவரை வீட்டு வாசலில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது லலிதாவை போட்டோ எடுத்த போது அதை அக்கம்பக்கத்தினர் பார்த்ததால் அவர் மிகவும் அவமானம் அடைந்தார்.

    தாய் லலிதாவை இழந்து தவிக்கும் குழந்தைகள்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லலிதா, அதே பகுதியில் உள்ள தனது தாய் முருகேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அங்கு திடீரென மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் அவர் அலறி கூச்சல் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லலிதா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பற்றி லலிதாவின் தாய் முருகேஸ்வரி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகளிர் குழு கடனுக்காக அவமானப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லலிதா தற்கொலை செய்து கொண்டதால் அவரது 3 வயது மகளும், 6 மாத ஆண் குழந்தையும் அனாதையாகி விட்டனர். தாயை இழந்த 2 குழந்தைகளையும் பார்த்து உறவினர்கள், கிராம மக்கள் கண்ணீர் விட்டு அழுதது பார்ப்போரின் கண்களை குளமாக்கியது.
    Next Story
    ×