search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீஸ் மோப்ப உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்த காட்சி.
    X
    கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீஸ் மோப்ப உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்த காட்சி.

    திருப்பூரில் வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை

    திருப்பூரில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவருடைய நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார் பட்டியை சேர்ந்தவர் முருகன் (20). இவரது நண்பர் ஆறுமுகம் (20). இவர்கள் இருவரும் திருப்பூர் காலேஜ் ரோடு வசந்தம் நகரில் அறை எடுத்து தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இருவரும் அறையில் இருந்தனர். மதியத்திற்கு மேல் முருகன் மட்டும் வெளியே சென்றார். பின்னர் அவர் அறைக்கு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் எந்த பதிலும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு வசந்தம் நகர் பகுதியில் உள்ள வீதியில் முருகன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. உடலின் பல்வேறு இடங்களில் கூர்மையான ஆயுதங்களால் குத்திய காயங்கள் இருந்தது.

    தகவல் கிடைத்து அங்கு சென்ற ஆறுமுகம் தனது நண்பர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    அது கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது முருகன் தனது நண்பர் சசிகுமாரின் தங்கை உறவு முறை பெண்ணை தவறாக பேசியதால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முருகனை சசிகுமார் மது குடிக்க அழைத்து சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணை தவறாக பேசியது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சசிகுமார் வசந்தம் நகர் பகுதிக்கு முருகனை அழைத்து வந்து கத்தியால் கழுத்தை அறுத்தும் குத்தியும் கொலை செய்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் சசிகுமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இக்கொலையில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×