search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையான மணிகண்டன்.
    X
    கொலையான மணிகண்டன்.

    சாத்தான்குளம் ஆட்டோ டிரைவர் கொலையில் 3 வாலிபர்கள் கைது

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு அம்சம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது அம்சம்மாள் கர்ப்பிணியாக உள்ளார். அவர் பிரசவத்துக்காக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மணிகண்டன் தசரா குழுவில் இருந்தார். தசரா குழு வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் இருந்து அருகில் உள்ள மற்றொரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தார். இதனிடையே தனது மகனுக்கு மணிகண்டனால் ஆபத்து இருப்பதாக ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் தாய் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.

    அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் தனது மாமனார் ஊரான ஸ்ரீவைகுண்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

    சமீபத்தில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் மீண்டும் சாத்தான்குளத்துக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி அங்குள்ள பஜாரில் கடையில் புரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கு மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் திடீரென ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். எனினும் அவர்கள் ஓட ஓட விரட்டி சென்று மணிகண்டனை வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் மந்தரம் மகன் மணிகண்டன், ஷியாம், முத்து என்ற இசக்கிமுத்து, செல்லப்பா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கொலையாளிகள் பேய்குளத்தில் இருந்து தப்பி செல்ல இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று காலை அவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதில் சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவை சேர்ந்த பாப்புலிங்கம் மகன் முத்து என்ற இசக்கிமுத்து (20), வேல்பாண்டி மகன் நெல்லப்பா (18), மரியஜோசப் என்பவரின் மகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மந்திரம் மகன் மணிகண்டன், ஷியாம் ஆகிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×