search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை கொன்று வாய்க்காலில் வீசிய தனியார் பஸ் கண்டக்டர்
    X

    திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை கொன்று வாய்க்காலில் வீசிய தனியார் பஸ் கண்டக்டர்

    கரூரில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை காதலனே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர்:

    கரூர் அருகே வாங்கலில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த கிடந்த பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்து கொன்று வாய்க்காலில் வீசியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கொலை செய்தது யார்? அவரது பெயர், ஊர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூர் சங்கரன்பாளையம் மீனாம் பள்ளி பகுதியை சேர்ந்த பிரேமானந்தம் மகள் பேபி (வயது 21) என்பதும், அவரை கொலை செய்தது அவரது காதலன் நாமக்கல் மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த அன்பரசு (22) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அன்பரசுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பேபியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியானது.

    பேபி நாமக்கல் மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் அன்பரசுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். 

    சம்பவத்தன்று இருவரும் கரூர் வாங்கல் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பகுதிக்கு வந்து அங்கு கரையில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது பேபி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அன்பரசுவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசு , பேபியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். 

    இதையடுத்து என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த அன்பரசு, பேபியின் கழுத்தை சேலையில் இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை வாய்க்காலில் தூக்கி போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்தநிலையில் போலீசார் விசாரணையில் அவர் சிக்கிக்கொண்டார். 

    கைதான அன்பரசுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த கொலை சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. காதலியை காதலனே கொலை செய்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×