search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில் பயங்கர தீ விபத்து - 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
    X

    திருத்துறைப்பூண்டியில் பயங்கர தீ விபத்து - 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

    திருத்துறைப்பூண்டியில், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம் அடைந்தது.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம் அடைந்தது. தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பெரியநாயகிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஓரு சில ஓட்டு வீடுகளை தவிர அனைத்துமே கூரை வீடுகள் ஆகும். நேற்று மதியம் 1 மணியளவில் இந்த பகுதியில் உள்ள குருமூர்த்தி(வயது 50) என்பவர் வீடு திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது.



    சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அருகில் இருந்த வீடுகளிலும் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த சிவகுமார், தங்கையன், முத்துக் கிருஷ்ணன், பாலு, ராஜூ, சாமிக்கண்ணு, குமர கண்ணன், விவேகானந்தன், நாகராஜன், ராஜப்பன், அய்யப்பன், மணிகண்டன் சிவபாலன், பக்கிரிசாமி, மெய்க்கண்டவேல், மகேந்திரன், சண்முகம், குபேஸ்குப்தா, ராஜேந்திரன், ராஜீவ்காந்தி, வடிவேலு, இந்திரா, அண்ணாத்துரை, கருணாநிதி, பொதியப்பன், வாசுகி, ராமசாமி, பாஸ்கர், ரமணி, தங்கவேல், வைரக்கண்ணு, சித்ரவேல், பரசுராமன் ஆகியோரது வீடுகள் உள்பட 45 வீடுகள் எரிந்து நாசமாயின.

    தீ விபத்து ஏற்பட்டபோது அங்குள்ள வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர வெடிச் சத்தம் ஏற்பட்டது. அப்போது அங்கு தீயை அணைத்துக் கொண்டு இருந்த நெடும் பாலத்தை சேர்ந்த ராஜூ(48) தலையில் வெடித்த சிலிண்டரின் ஒரு பகுதி வந்து விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி, திருவாரூர், முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய ஊர்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் 50்-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தில் அனைத்து வீடுகளும் எரிந்து நாசமாயின.

    தீ விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வராமல் கால தாமதமாக வந்ததால் தான் அனைத்து வீடுகளும் முழுமையாக எரிந்ததாகக் கூறி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) இனிக்கோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த நகை, பணம், டி.வி., மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, பீரோ, துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாச மானது. சேத மதிப்பு லட்சக் கணக்கில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வில்லை. இதுகுறித்து திருத் துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கலெக்டர் நிர்மல்ராஜ், தாசில்தார் மகேஷ்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆறுதல் கூறினர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஓவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, 5 கிலோ அரிசி, 1 லிட்டர் மண் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டது. 
    Next Story
    ×