search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அருகே லாரி- ஆம்புலன்ஸ் மோதல்: 3 பேர் பலி
    X

    பல்லடம் அருகே லாரி- ஆம்புலன்ஸ் மோதல்: 3 பேர் பலி

    பல்லடம் அருகே லாரியும், ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் நோயாளி உள்பட 3 பேர் பலியானார்கள்.

    பல்லடம்:

    திருப்பூர் அருகே உள்ள நல்லூர் பொன்முத்து நகரை சேர்ந்தவர் ஜோதி ராஜ் (50). பனியன் தொழிலாளி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் உடல் நலம் தேறவில்லை. இதனை தொடர்ந்து ஒட்டன் சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். அதில் ஜோதிராஜ் மனைவி பிரியதர்சினி (44), அவரது சகோதரிகள் ஞான செல்வம் (42), ஜான்சி (40), இவரது மகன் பெலிக்ஸ் (25), உறவினர் சங்கீதா (28) ஆகியோர் சென்றனர்.

    ஆம்புலன்சை திருப்பூரை சேர்ந்த முத்து கிருஷ்ணன் ஓட்டி சென்றார். ஆம்புலன்ஸ் திருப்பூர் -தாராபுரம் சாலை அவினாசி பாளையத்தில் உள்ள வளைவில் திரும்பியது.

    அப்போது கோவையில் இருந்து கரூருக்கு சிமெண்ட் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. திடீரென லாரியும், ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் ஆம்புலன்ஸ் நொறுங்கியது. அதில் இருந்த ஞான செல்வம், பிரிய தர்சினி ஆகியோர் சம்பவ இடத்திலே இறந்தனர். படுகாயம் அடைந்த ஜோதிராஜ், ஜான்சி, பெலிக்ஸ், சங்கீதா மற்றும் வேன் டிரைவர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு ஜோதி ராஜ் இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மற்ற 4 பேர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து அவினாசி பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×