search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி
    X
    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி

    கவுத்திமலையில் கிடைக்கும் கனிம வளத்துக்காக பசுமை சாலை அமைக்கவில்லை - கலெக்டர் அறிக்கை

    பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டம் கவுத்தி மலை பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்து செல்வதற்காக என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் இருந்து சேலத்திற்கு பசுமை வழிச்சாலை அமைய உள்ளது. தொழில் நகரங்களான சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்றுலா தலங்களான திருவண்ணாமலை, ஊட்டி, ஏற்காடு ஆகியவற்றை இந்த சாலை மார்க்கமாக இணைக்க பெரிதும் உதவுகிறது.

    மேலும் விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பிற நகரங்களுக்கு துரிதமாக கொண்டு செல்ல இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த சாலையின் வடிவமைப்பில் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதி கூடுமான வரை தவிர்க்கப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் தோராயமாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 18 ஹெக்டேர் பரப்பு வன நிலத்தில் மட்டுமே சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு குறைந்த அளவிலான மரங்களே அகற்றப்படுவதுடன், இந்த சாலை சுமார் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் சுமார் 3 லட்சம் மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுத்தி மலை பகுதிக்கும், பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கும் இடையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கவுத்திமலை கனிமம் குறித்த மனுவும் ஏற்கனவே தள்ளுபடி செய்து முடிக்கப்பட்டு விட்டது.

    பசுமையுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் கவுத்திமலை.


    எனவே, இந்த சாலை அமைக்கும் திட்டம் கவுத்தி மலை பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்து செல்வதற்காக என்ற கருத்து முற்றிலும் தவறானது. இந்த திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ள மொத்தம் 860 ஹெக்டேர் நிலத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் 155 ஹெக்டேர், தனியார் நிலங்களில் நன்செய் நிலங்கள் 100 ஹெக்டேர், புன்செய் நிலங்கள் 605 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டம் பொதுமக்களின் குறிப்பாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெரிதும் மேம்படுத்தக் கூடியதாகும். இந்த திட்டம் பொதுமக்களின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படும் சீரிய திட்டமாகும்.

    இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், விவசாயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை எந்த நேரத்திலும் சந்தித்து, தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 3-ம் நபர்களால் பரப்பப்படும் வீண் வதந்திகளை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களான வாட்ஸ் அப் மற்றும் முகநூல் மூலம் வரும் தகவல்கள் உண்மையல்ல.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Next Story
    ×