என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ கண்காட்சி நாளை தொடக்கம் - கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்
    X

    ராணுவ கண்காட்சி நாளை தொடக்கம் - கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்

    மாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சியையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நாளை (11-ந் தேதி) தொடங்குகிறது. 14-ந் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.

    இதனை பிரதமர் மோடி 12-ந் தேதி முறைப்படி தொடங்கி வைக்கிறார். கண்காட்சிக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் நவீன ரக பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

    தொழில் நிறுவனங்கள் சார்பில் கருத்தரங்குகள், முப்படையினரின் சாகச நிகழ்ச்சிகள் நடக்கிறது. கண்காட்சி நடைபெறும் இடம் முழுவதும் ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. ராணுவ கண்காட்சியை வருகிற 14-ந் தேதி பொதுமக்கள் பார்க்கலாம்.



    ராணுவ கண்காட்சியை யொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ராணுவ தளவாட கண்காட்சிக்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் நாளை முதல் 14-ந் தேதி வரை போக்குவரத்து மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நேரடியாக செல்லும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை சோதனைச்சாவடியிலிருந்து பழைய மகாபலிபுரம் சாலை வழியாகவும், கோவளம் சந்திப்பில் இருந்து கேளம்பாக்கம் இணைப்பு சாலை வழியாகவும் பழைய மகாபலிபுரம் சாலையை அடைந்து திருப்போரூர் பூஞ்சேரி வழியாக புதுச்சேரி செல்லலாம்.

    புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வரும் வாகனங்கள், வெங்கம்பாக்கத்தில் இருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாகவும், பூஞ்சேரி சந்திப்பு வழியாகவும் சென்னை செல்லலாம்.

    11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை கண்காட்சிக்கு வர்த்தகம் தொடர்பாக சென்னையில் இருந்து வரும் வாகனங்கள், கோவளம் சந்திப்பு வழியாக அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள திருவிடந்தை வாகன நிறுத்தத்தை சென்றடையலாம். மாமல்லபுரம் பகுதியிலிருந்து வரும் வர்த்தகம் தொடர்பான வாகனங்கள், பேரூர் சந்திப்பைத் தாண்டி கண்காட்சியின் பின்புறமுள்ள வாகன நிறுத்தங்களை வந்தடையலாம்.

    14-ந் தேதியன்று கண்காட்சியைக் காணவரும் பொதுமக்கள், கோவளம் மற்றும் பேரூர் சந்திப்பு வழியாக கண்காட்சி திடலை அடைந்து இருசக்கர வாகனம், கார்களுக்கென ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தை வந்தடையலாம். அரசு பேருந்துகளின் மூலம் வருவோர், கண்காட்சிக்கு அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்தடையலாம்.

    கண்காட்சி திடலை ஒட்டிய திருவிடந்தை, கோவளம், வடநெம்மேலி மற்றும் தெற்குப்பட்டு கிராம மக்களின் வாகனங்களும், பேருந்துகளும் சென்று வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×