என் மலர்
செய்திகள்

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் மறியல்- தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் இன்று மறியல் நடத்தினர். மறியல் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் தி.மு.க.வினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த தி.மு.க.வினர் அங்கும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 59-வது வட்ட செயலாளர் ஆறுமுகம் என்பவர் திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ணையை உடல் முழுவதும் ஊற்றினார். பிறகு தீக்குளிக்க முயன்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாய்ந்து சென்று தடுத்து நிறுத்தினர்.
இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், முருகையன் ஆகியோர் தீக்குளிக்க முயன்ற ஆறுமுகம் மற்றும் மறியல் நடத்திய 50 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
கலெக்டர் அலுவலகம் முன் தி.மு.க பிரமுகர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் ஈரோடு காளை மாட்டு சிலை முன்பும் நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.






