என் மலர்
செய்திகள்

மறைமலைநகரில் ரெயில்வே ஊழியர், கால் டாக்சி டிரைவர் காவலாளியை தாக்கி நகை-பணம் கொள்ளை
செங்கல்பட்டு:
சென்னை அயனாவரம் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெகதீசன். ரெயில்வே ஊழியர். இவர் திருவண்ணாமலையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் காரில் சென்றார்.
பின்னர் நேற்று இரவு அவர்கள் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணி அளவில் மறைமலைநகரை அடுத்த மகேந்திரா சிட்டி தொழில் பூங்கா அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு ஜெகதீசன் இறங்கினார்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் திடீரென ஜெகதீசனை சரமாரியாக தாக்கினர். பின்னர் கார் கண்ணாடியை உடைத்து ஜெகதீசன் மனைவி அணிந்திருந்த 14 பவுன் நகையை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
பலத்த காயம் அடைந்த ஜெகதீசனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தாம்பரத்தை அடுத்த முடிச்சூரை சேர்ந்தவர் தியாகராஜன். கால் டாக்சி டிரைவர். நேற்று இரவு அவர் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள ஓட்டலில் பயணியை இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
மறைமலைநகர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது காரை நிறுத்திவிட்டு இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் தியாகராஜனை கத்தி முனையில் மிரட்டி சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பினர்.
ஊரப்பாக்கம் பிரியா நகரை சேர்ந்தவர் தாயுமானவன். மறைமலைநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அவர் மறைமலைநகர் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார். அங்கு வந்த மர்மகும்பல் தாயுமானவனை தாக்கி பணத்தை பறித்து சென்றுவிட்டது.
காயம் அடைந்த அவருக்கு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மறைமலைநகர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார்களை நிறுத்துபவர்களை குறி வைத்து கொள்ளை சம்பவம் அதிக அளவில் நடந்து வருகிறது. கொள்ளையை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் குற்றச்செயல்கள் குறையவில்லை. எனவே கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






