search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த மாணவர் தாமரைசெல்வன்.
    X
    தற்கொலை செய்த மாணவர் தாமரைசெல்வன்.

    உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவர்

    திருச்சி அருகே உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் புலிவலத்தை அடுத்த புத்தனாம்பட்டியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இங்கு கடலூர் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை மகன் தாமரைசெல்வன் (வயது 18) என்பவர் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    கடந்த மாதம் 18-ந்தேதி முதல் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்து வந்துள்ளார். நேற்று காலை விடுதி மாணவர்கள் கல்லூரிக்கு சென்று விட்டனர். ஆனால் தாமரை செல்வன் மட்டும் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார்.

    இதனிடையே மாலையில் கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் விடுதிக்கு வந்தனர். அப்போது தாமரைசெல்வன் அறையில் தங்கியிருந்த மாணவர்கள் அங்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. தாமரைசெல்வன் பெயரை கூறி அழைத்த போது அறையின் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை.

    அதிர்ச்சியடைந்த மாணவர்கள், அறையின் பின்பக்க ஜன்னல் வழியாக பார்த்த போது , உள்ளே அறையின் மேற்கூரையில் உள்ள இரும்பு கொக்கியில் போர்வையால் தூக்குப் போட்ட நிலையில் தாமரை செல்வன் பிணமாக தொங்கினார். இது குறித்த தகவல் அறிந்ததும் புலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தாமரை செல்வன் எதற்காக தற்கொலை செய்தார் என்று தெரியவில்லை. சரியாக படிப்பு வராததால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கடந்த மாதம் 18-ந்தேதியில் இருந்தே கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததற்கான காரணம் என்னவென்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தாமரை செல்வன் தற்கொலை செய்து கொண்ட அறையை போலீசார் சோதனை செய்த போது, அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் வாழ்க்கை என்பது ரெயில் பயணம், அதை கடக்க தெரிந்தவன் சாதனை படைப்பான், கடக்க தெரியாதவன் சாவான். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான்தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் வாழ பிடிக்காததால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    Next Story
    ×