என் மலர்
செய்திகள்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு மாற திட்டமா?
கடலூர்:
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் அருண்மொழிதேவன் (கடலூர்), சந்திரகாசி (சிதம்பரம்), எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பாண்டியன் (சிதம்பரம்), கலைச்செல்வன் (விருத்தாசலம்), முருகுமாறன் (காட்டுமன்னார் கோவில்) ஆகியோருக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
அமைச்சர் தங்களை மதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார்கள். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்கள்.
ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்த போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
அனைவரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்ற எந்த நிகழ்ச்சிகளிலும் கடலூர் மாவட்ட எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
இந்த நிலையில் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் திடீரென்று தினகரன் அணிக்கு மாறினார்.
சத்யா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன் ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் எம்.சி. சம்பத் விழாக்களை புறக்கணித்து வந்தனர்.
நேற்று மாலை சத்யா பன்னீர்செல்வம் திடீரென்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் பிரசாந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் தனது தொகுதியில் உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டது இல்லை. எந்த பணிகளும் செய்யவில்லை. எனது தொகுதியான பண்ருட்டி தொகுதியில் எதுவும் செய்வதும் கிடையாது.
எங்கள் தொகுதியில் மக்கள் பணி சம்பந்தமாக மாவட்ட அமைச்சர் என்ற முறையில் மனு அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. முட்டுக்கட்டை போடுகிறார்.
இதனை மீறி நாங்கள் மக்கள் பணிகள் செய்தால் அதனையும் தடுக்கிறார். இதனால் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அரசுக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுவதோடு, களங்கம் ஏற்படுகிறது.
பண்ருட்டி பகுதிக்கு வர இருந்த கல்லூரியை அமைச்சர் எம்.சி.சம்பத் தடுத்து வேறு பகுதிக்கு மாற்றி விட்டார். இதனால் எங்கள் தொகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டியில் பல ஆண்டுகளாக நடைபெறும் பாலம் கட்டும் பணிகள் அமைச்சர் தலையீட்டால் தாமதம் ஆகி வருகிறது. மேலும் இந்த பணிகளை விரைவில் முடிக்க அமைச் சர் எம்.சி.சம்பத் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
கோரிக்கைகள் குறித்து பலமுறை மனு அளித்தும், தபால் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆட்சிக்கு அமைச்சரால் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. உடனே அமைச்சர் எம்.சி.சம்பத்தை அழைத்து எச்சரிக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய அவருக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. அமைச்சர் எம்.சி. சம்பத் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இவர்கள் தினகரன் அணிக்கு மாறப் போவதாக தகவல் பரவியுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக முருகுமாறன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, “2 நாட்கள் பொறுத்திருங்கள். திங்கட்கிழமை பதில் சொல்கிறேன்” என்றார்.
பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது, “அருண்மொழி தேவன் எம்.பி. டெல்லியில் இருக்கிறார். அவர் கடலூர் வந்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்” என்றார்.






