என் மலர்
செய்திகள்

கயத்தாறில் பாலத்தில் மோதி கார் தீப்பிடித்தது: நகைக்கடை அதிபர் உயிர் தப்பினார்
கயத்தாறு:
நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 29). இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். முகமதுஅலி தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக இன்று அதிகாலை அவர் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
கயத்தாறு பகுதி நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பாலத்தின் சுவற்றில் மோதியது. அப்போது காரில் இருந்த உயிர்காக்கும் பலூன் முகமது அலியை மூடிக்கொண்டது. இதனால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் சிறிது நேரத்தில் என்ஜினில் தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது அலி காரை விட்டு கீழே இறங்கி ஓடிவிட்டார்.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்து கார் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. மேலும் இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.