என் மலர்
செய்திகள்

கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியைகள் 3 பேர் உள்ளிருப்பு போராட்டம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் ஜாய்சுமிதா, நிஷா, பிரேமலதா.
இவர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லையென கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆசிரியைகள் ஜாய்சுமிதா, நிஷா, பிரேமலதா ஆகிய 3 பேரும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர்.
ஆனால் இது வரை அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து ஆசிரியைகள் நேற்று நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலகத்திற்கு சென்றனர்.
அலுவலகத்தில் சம்பள பாக்கி குறித்து ஆசிரியைகள் அதிகாரிகளிடம் கேட்டனர். ஆனால் அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து 3 ஆசிரியைகளும் திடீரென அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் அலுவலக பணி நேரம் முடிந்த பின்பும் அலுவலகத்தை விட்டு வெளியேற மறுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து ஆசிரியைகள் ஜாய்சுமிதா, நிஷா, பிரேமலதா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவிலில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு நாங்கள் கடந்த 2016-ம் ஆண்டுதான் இடமாறுதல் பெற்று வந்தோம். வேறு பள்ளியில் இருந்து மாறுதலாகி வந்ததற்கான உத்தரவு உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டோம்.
ஆனால் 18 மாதமாக எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. எனவே நாங்கள் மாவட்ட கலெக்டரிடம் இதுபற்றி நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தோம். அதன் பிறகு கடந்த 28-8-2017-ல் எங்களது பணி மாறுதலுக்கான ஆவணங்கள் ஏற்கப்பட்டது. 12-9-2017-ல் சம்பளம் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகும் சம்பளம் வழங்காமல் அலைகழிக்கிறார்கள். எனவேதான் வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுபற்றி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், நேற்றிரவு 9 மணிக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியைகளுடன் சமரச பேச்சு நடத்தினர்.
அப்போது ஆசிரியைகளின் பிரச்சினைக்கு இன்று தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று ஆசிரியைகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினர்.