என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்ப அரசியல் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது: பண்ருட்டி ராமச்சந்திரன்
    X

    குடும்ப அரசியல் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது: பண்ருட்டி ராமச்சந்திரன்

    குடும்ப அரசியல் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஏழைகளின் கட்சி, ஏழைகள் இருக்கும் வரை அ.தி.மு.க. இருக்கும். அ.தி.மு.க.வின் ஆணிவேர் நான். ஆணிவேர் ஆழத்தில் தான் இருக்கும். சல்லி வேர் வெளியே தெரியும். தேவைபடும்போது மட்டும் ஆலோசனை சொல்வேன். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் சிறப்பாக நடைபெறுகிறது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். சசிகலா கட்சியில் உறுப்பினராகவே இல்லாத தனது அக்கா மகன் தினகரனை துணை பொது செயலாளராக நியமித்தது தவறு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பண்ருட்டி பயணியர் விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வில் தலைவராக வேண்டும் என்றால் கருணாநிதி குடும்பத்தில் தான் பிறக்க வேண்டும். கருணாநிதி செய்யும் குடும்ப அரசியலை தான் சசிகலாவும் செய்ய நினைத்தார். இப்படி குடும்ப அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது. அப்படி செய்யும் கட்சிகள் அழியும்.

    உதாரணத்திற்கு காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் குடும்ப அரசியலால் அழிந்து விட்டன. தமிழ்நாட்டில் இனி எந்த நடிகராலும் ஆட்சிக்கு வரமுடியாது. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதால் நடிகர்கள் கருத்துக்கள் கூறலாம். ஆனால், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திவிட முடியாது.

    மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கத்தான் வேண்டும். இது எம்.ஜி.ஆர். காலத்திலே கடைபிடிக்கப்பட்டது. தமிழக அமைச்சர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் மாற்றி மாற்றி பேசுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×