search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குள்ளஞ்சாவடி அருகே மூதாட்டி அடித்து கொலை: தாய்-மகள் கைது
    X

    குள்ளஞ்சாவடி அருகே மூதாட்டி அடித்து கொலை: தாய்-மகள் கைது

    குள்ளஞ்சாவடி அருகே கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட மூதாட்டியை தாய்-மகள் சேர்ந்து அடித்து கொலைசெய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை அடுத்த கருமாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 70). இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி வளர்மதிக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்பு ரூ.1 லட்சம் கடனாக கொடுத்தார். இந்த ரூபாயை திருப்பித் தருமாறு வளர்மதியிடம் பலமுறை கேட்டு வந்தார். ஆனால் அவர் கொடுக்கவில்லை.

    இந்தநிலையில் நேற்று மாலையும் மீனாட்சி பணத்தை திருப்பி கேட்பதற்காக வளர்மதியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வளர்மதியும், அவரது தாய் பாப்பாத்தியும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் மீனாட்சி பணத்தை கேட்டார். உடனே அவர்கள் தாங்கள் பணம் வாங்கும் போது எழுதி கொடுத்த பத்திரத்தை கொடுத்து விட்டு பணத்தை வாங்கி செல்லுங்கள் என்று கூறினர்.

    இதை நம்பிய மீனாட்சி வீட்டுக்கு சென்று பத்திரத்தை எடுத்து கொண்டு மீண்டும் அங்கு வந்தார். அவரை வளர்மதியும், அவரது தாயாரும் வீட்டிற்குள் வருமாறு அழைத்தனர். உள்ளே வந்த மீனாட்சியை அவர்கள் சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்தனர். இதில் மீனாட்சி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் மீனாட்சி அணிந்திருந்த 7½ பவுன் தங்க நகைகளையும் எடுத்துக் கொண்டு, அவரது உடலை வீட்டின் பின்புறம் வளர்மதியும், அவரது தாயும் மறைத்து வைத்தனர்.

    பின்னர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர். இரவு வீட்டுக்கு திரும்பி வந்த வளர்மதியும், அவரது தாயும் சேர்ந்து வீட்டில் மறைத்து வைத்திருந்த மீனாட்சியின் உடலை ரோட்டில் வீசினர். பின்னர் வளர்மதியின் தாய் பாப்பாத்தியின் சொந்த ஊரான குள்ளஞ்சாவடி அருகே உள்ள சிந்தாமணி குப்பத்துக்கு 2 பேரும் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் ரோட்டில் மீனாட்சி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு வளர்மதியின் வீட்டின் பின்புறம் சென்று நின்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வளர்மதியை தேடி சிந்தாமணி குப்பத்துக்கு சென்று வளர்மதியிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் வீட்டில் சோதனை செய்தபோது இறந்து போன மீனாட்சியின் நகைகள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே வளர்மதியையும், அவரது தாய் பாப்பாத்தி யையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட மூதாட்டியை தாய்-மகள் சேர்ந்து அடித்து கொலைசெய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×