என் மலர்
செய்திகள்

மெர்சல் பட சர்ச்சை: திரைப்படத்தில் அரசியலை கலக்க வேண்டிய அவசியமில்லை - ஜி.கே.வாசன்
திருவள்ளூர்:
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி, திருமழிசை, கிளாம்பாக்கம், தண்ணீர் குளம் போன்ற பகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கட்சி கொடி ஏற்றி, கல்வெட்டுகள் திறந்து வைத்து ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிளாம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு மக்களிடம் சென்று நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இந்த சுற்றுப்பயணம் மேற் கொண்டு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
தமிழகத்தில் கந்து வட்டி கொடுமை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக நெல்லையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தீக்குளித்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு உடனே தலையிட்டு கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்ய காரணமானவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவம் ஏற்படாமல் இருக்க விசாரணை கமிஷன் நியமித்து கந்து வட்டி கொடுமைகளை தமிழகத்தில் இருந்து அறவே ஒழிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் இன்று வரை 200-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புள்ளவர்களுக்கு போதிய வசதிகள் இல்லை. அரசின் மெத்தனபோக்கு காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி உள்ளது.
சுகாதாரத்துறை மிகவும் தாமதமாக விழித்து கொண்டது. இதனால் டெங்கு பலி எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையை ஆட்சியாளர்கள் மறைக்க பார்க்கின்றனர். டெங்குவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
காசிமேடு மீனவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற தவறியது மட்டுமின்றி அவர்களை காவல்துறை மூலம் அடித்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் மிகவும் வேதனைகுரியது. இதை தமிழ் மாநில காங்கிரஸ் கண்டிக்கிறது.
மெர்சல் படத்தை பொறுத்தவரையில் திரைபடமாக பார்க்கிறேன். 50 ஆண்டுகளில் இது போன்ற பல திரைபடங்கள் அரசியல்,சமூகம் பற்றி சரி தவறு என்று காண்பிக்கப்பட்டுள்ளது. மற்றும் அரசின் தணிக்கை குழு திரைபடத்தை பார்த்து சான்று அளித்துள்ள நிலையில் மெர்சல் திரைபடத்தை எதிர்ப்பது ஏற்புடையதல்ல.
திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டுமே தவிர அதில் அரசியலை கலக்க வேண்டிய தேவையில்லை.
ஆளும் ஆட்சியாளர்களை பொறுத்தவரை அரசுபணிகளை நிறைவேற்ற முடியாமல் அவர்களுடைய உட்கட்சி பிரச்சனை உள்ளது. ஆட்சியாளர்கள் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தகூடிய நிலையில் தற்பொழுது இல்லை எனவே மக்கள் பணிகளை முழுமையாக செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் அதை சரியாக செய்ய தவறினால் மக்கள் அவர்களை நிராகரிக்க முடிவு செய்துவிட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் விக்டரி மோகன், துணை தலைவர் வேப்பம்பட்டு அன்பழகன், வட்டார தலைவர் சிவகுமார், இளைஞரணி மாவட்ட செயலாளர் சேலை ராதா கிருஷ்ணன், விவேகானந்தன்,வட்டார செயலாளர் நாகராஜன், அருள்ராஜ், தியாகராஜன், மாசி, பிரபு, நரேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.