என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை - கடலூர் கோர்ட் தீர்ப்பு
    X

    விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை - கடலூர் கோர்ட் தீர்ப்பு

    விவசாயியிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை (வயது 40). விவசாயி. இவர் சொத்து பிரச்சினை தொடர்பாக திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தனது நிலத்துக்கான சிட்டா, அடங்கல் கோரி கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மனு கொடுத்தார்.

    அப்போது பதிவறை எழுத்தராக இருந்த மஞ்சமுத்து என்பவர் சிட்டா, அடங்கல் வழங்குவதற்கு ரூ.1,500 லஞ்சம் கேட்டார்.

    இது குறித்து விவசாயி செந்தாமரை கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் செந்தாமரை ரூ.1,500 லஞ்ச பணத்தை மஞ்சமுத்துவிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை தனது உதவியாளர் கொளஞ்சிநாதனிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவறை எழுத்தர் மஞ்சமுத்து மற்றும் உதவியாளர் கொளஞ்சிநாதன் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதிகட்ட விசாரணை நடந்தது. மஞ்சுமுத்துக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பு கூறினார்.

    அபராத தொகையை செலுத்தாவிட்டால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். உதவியாளர் கொஞ்சிநாதன் இறந்து விட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
    Next Story
    ×