search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்திரப்பதிவு எல்லா நிலங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை: ஐகோர்ட்டு நீதிபதிகள் விளக்கம்
    X

    பத்திரப்பதிவு எல்லா நிலங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை: ஐகோர்ட்டு நீதிபதிகள் விளக்கம்

    எல்லா விதமான நிலங்களையும் பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
    சென்னை:

    அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

    இதையடுத்து தமிழகத்தில் உள்ள நிலங்களை வகைப்படுத்தி, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரைறை செய்ய புதிய விதிகளை உருவாக்கி, சட்டத்திருத்தம் கொண்டு வரவும், அதுதொடர்பாக கொள்கை முடிவு எடுக்கவும் தமிழ அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி தமிழக அரசும் புதிய விதிகளை கொண்டு வந்து, கடந்த மே மாதம் 5-ந்தேதி அரசாணை வெளியிட்டது.

    இந்த புதிய விதிமுறைகளை ஐகோர்ட்டு முழுமையாக ஏற்கவில்லை. இந்த புதிய விதிமுறைகளின் படி நடைபெறும் பத்திரப்பதிவு இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கடந்த மாதம் 6-ந்தேதி உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு வக்கீல் காஜா மொய்தீன் ஹிஸ்தி ஆஜராகி, திருநெல்வேலி லேஅவுட் மற்றும் ரியல் எஸ்டேட் சங்கம் சார்பில் முறையிடுகிறேன். இந்த ஐகோர்ட்டு கடந்த மே 6-ந்தேதி உத்தரவு பிறப்பித்தும் புதிய விதிமுறைகளின் கீழ் பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர்கள் மறுக்கின்றனர். எனவே இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்றார்.

    அதற்கு நீதிபதிகள், நாங்கள் எல்லா விதமான நிலங்களையும் பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கவில்லை. அதேநேரம் சட்டப்பூர்வமான நிலங்களை பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர்கள் மறுத்தால் அவர்கள் மீது கோர்ட்டு அவதிப்பு வழக்கை தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×