என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை
    X

    ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை

    கடலூரில் விபத்து இழப்பீட்டு தொகை வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தெய்வநாயகம். இவர் கடந்த 2008-ம் ஆண்டு சாலை விபத்தில் பலியானார்.

    இதையடுத்து அவரது மனைவி ஞானாம்பாள் தமிழக அரசு வழங்கும் சமூக பாதுகாப்பு விபத்து இழப்பீட்டு தொகை பெறுவதற்காக கடந்த 3-8-2008 அன்று அப்போதைய மாளிகம்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த சந்திரசேகரிடம் மனு கொடுத்தார்.

    அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர், விபத்து இழப்பீட்டு தொகை பெற ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றார். இது குறித்து ஞானாம்பாள் தனது உறவினரான கிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்தார்.

    உடனே கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகரை, கிருஷ்ணமூர்த்தி சந்தித்து பேசினார். அப்போதும், ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு கிராம நிர்வாக அதிகாரி கூறினார். இது தொடர்பாக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார்.

    பின்னர் போலீசாரின் அறிவுரையின் பேரில், கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகரிடம் கிருஷ்ணமூர்த்தி ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அப்போது சந்திரசேகரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கடலூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து சந்திரசேகர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×