என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரோடு ஷோக்கள் நடத்தக் கூடாது: மக்கள் உயிர் முக்கியம்- பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து கம்பீர் கருத்து
- சின்னசாமி மைதான நுழைவாயில் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
- ஆர்சிபி அணிக்கெதிராக போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். நுழைவாயில் அருகே திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து புறப்படுகிறார்கள். புறப்படுவதற்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பெங்களூரு சின்னசாமி மைதானம் நுழைவாயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து கம்பீர் கூறியதாவது:-
நான் ஒருபோதும் ரோடு ஷோ நடத்துவதை நம்புவதில்லை. ரோடு ஷோ நடத்தக்கூடாது. மக்களின் உயிர் முக்கியமானது.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இங்கிலாந்து டெஸ்ட் குறித்து கூறுகையில் "பும்ரா எந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. அணி தோற்றாலும், வெற்றி பெற்றாலும் எப்போதும் நான் நெருக்கடியில் இருப்பேன். சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு முடிவு தரக்கூடிய சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்வோம்" என்றார்.






