என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை: டி கிளெர்க் அதிரடியால் தென் ஆப்பிரிக்கா வெற்றி
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய இந்தியா 49.5 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விசாகப்பட்டினம்:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒரு கட்டத்தில் 102 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 94 ரன்கள் குவித்தார். பிரதிகா ராவல் 34 ரன்னும், ஸ்நே ரானா 33 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் சோ ட்ரியான் 3 விக்கெட்டும், காப், கிளர்க், எம்லாபா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் 70 ரன்கள் எடுத்தார். சோ ட்ரியான் 49 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
8வது வீராங்கனையாக களமிறங்கிய டி கிளெர்க் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் நிதானமாக ஆடிய அவர் பின் அதிரடியில் இறங்கினார். அவர் 54 பந்துகளில் 5 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 48.5 ஓவரில் 252 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் கிராந்தி கவுட், ஸ்நே ரானா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.






