என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மேலும் ஒரு நாள் அவகாசம்: இந்தியா வந்து விளையாடாவிட்டால் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணி- ஐசிசி
    X

    மேலும் ஒரு நாள் அவகாசம்: இந்தியா வந்து விளையாடாவிட்டால் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணி- ஐசிசி

    • இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம் என வங்கதேசம் தெரிவித்தது.
    • தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த வங்கதேசம், இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம். அங்கு எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

    ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது இயலாத காரியம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கைவிரித்தது. பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்தியாவுக்கு செல்வதில்லை என்ற நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத வங்கதேசம், எந்த வித அழுத்தத்துக்கும் அடிபணியமாட்டோம் என்றும் கொக்கரித்தது.

    இந்தியாவில் ஆடுவது குறித்து ஜன.21-ந்தேதிக்குள் (அதாவது நேற்று) தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று அணி அறிவிக்கப்படும் என ஐ.சி.சி., வங்கதேசத்தை எச்சரித்து இருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வங்கதேசத்துக்கு ஆதரவு கரம் நீட்டியது. ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான், வங்கதேசத்தின் உணர்வுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்குரிய ஆட்டங்களை பாகிஸ்தானில் நடத்த தயாராக இருப்பதாக அதில் கூறியிருந்தது.

    இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி.யின் போர்டு இயக்குனர்கள் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்தனர். இதில் வங்கதேசத்தின் கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து விளையாட மறுத்தால் அதற்கு பதிலாக மாற்று அணியை சேர்ப்பதற்கு பெரும்பாலான இயக்குனர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதாவது பங்கேற்ற 15 இயக்குனர்களில் பாகிஸ்தான் மட்டுமே வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவு அளித்தது.

    பின்னர் ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், 'பலகட்டமாக எல்லாவிதமான பாதுகாப்பு அம்சங்களையும், தனிப்பட்ட முறையிலும் விரிவாக ஆய்வு செய்த போது, இந்தியாவில் போட்டி நடைபெறும் எந்த ஒரு இடத்திலும் வங்கதேச அணியினர், ஊடகத்தினர், அதன் அதிகாரிகள், ரசிகர்களுக்கு எந்தவித பாதுகாப்பு மிரட்டலும் இல்லை என சுட்டிகாட்டப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது சாத்தியமில்லை. அது மட்டுமின்றி நம்பகமான எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத இத்தகைய சூழலில் போட்டி அட்டவணையை மாற்றம் செய்வது என்பது புனிதமான ஐ.சி.சி. போட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தவறான முன்னுதாரணமாகி விடும். மேலும் இது ஐ.சி.சி.யின் நடுநிலை தன்மைக்கு பாதகமாக அமையும் என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இப்போதைக்கு வங்கதேசத்துக்கு மேலும் ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று தொடர்ந்து முரண்டு பிடித்தால் அந்த அணிக்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் உள்ள ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படும்.

    20 அணிகள் இடையிலான 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேச அணிக்குரிய ஆட்டங்களை கொல்கத்தா (பிப்.7 வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, பிப்.9 இத்தாலிக்கு எதிராக, பிப்.14 இங்கிலாந்துக்கு எதிராக) மற்றும் மும்பையில் (பிப்.17 நேபாளத்துக்கு எதிராக) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×