என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முதல்முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து... 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
- 124 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
- முதல்முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் இருந்தன. இந்நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 11 ரன்களில் ரோகித் சர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், 3 ரன்னில் ஷ்ரேயஸ் அய்யர், 1 ரன்னில் கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து நிதிஷும் அவுட்டாக, அடுத்து வந்த ஜடேஜாவும் அவுட்டானார். இதனால் இந்திய அணி எளிதில் தோல்வியை தழுவும் என அனைவரும் நினைத்தநிலையில், ஹர்ஷித் ராணா ஆட்டத்தை மாற்றினார்.
சரிவைசென்ற அணியை கோலி-ராணா இணை மீட்டது. கோலி சதம் விளாசினார். ஹர்ஷித் ராணா அரைசதம் கடந்தார். ஆனால் ஃபுல் டாசில் 52 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து குல்தீப் யாதவ் களமிறங்கினார். மறுபக்கம் 124 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். அடுத்து அர்ஷ்தீப் சிங் களமிறங்க, மறுபக்கம் ரன் அவுட் ஆனார் குல்தீப். இதனால் இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப் பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஜகரி ஃபோக்ஸ், கிறிஸ் கிளார்க் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேடன் லெனாக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் முதல்முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.






