என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலக கோப்பையில் ஒரு சீசனில் அதிக ரன்கள்: அலீசா ஹீலியை முந்தி லாரா வோல்வார்ட் சாதனை
- இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் அடித்து அவுட்டானார்.
- அரையிறுதி போட்டியிலும் லாரா வோல்வார்ட் சதம் அடித்திருந்தார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப்போட்டியில் கடைசி வரை தனி ஒருவனாக போராடிய தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் அடித்து அவுட்டானார். முன்னதாக அரையிறுதி போட்டியிலும் அவர் சதம் அடித்திருந்தார். மொத்தமாக இந்த தொடரில் 571 ரன்கள் அடித்தார்.
இதன்மூலம் மகளிர் உலக கோப்பையில் ஒரு சீசனில் அதிக (571) ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் லாரா வோல்வார்ட் படைத்தார்.
மகளிர் உலக கோப்பையில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் லாரா வோல்வார்ட்டுக்கு அடுத்த இடங்களில் அலிசா ஹீலி - 509 (2022) மற்றும் ராக்கேல் ஹெயின்ஸ் - 497 (2022) ஆகியோர் உள்ளனர்.






