என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவை தட்டித் தூக்கிய இந்தியா.. ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி
- தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் ஏய்டன் மர்க்ரம் ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.
- ஆட்டத்தின் இறுதியில் பாஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார்.
அடுத்தாதாக கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார்.
எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
கடைசியாக 60 ரன்களில் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் கோடி சேர்ந்த ஜடேஜா 32 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகினார்.
எனவே மொத்தம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடியது.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் ஏய்டன் மர்க்ரம் ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.
2வது ஓவரிலேயே ரியான் ரிக்கெல்டன் போல்ட் ஆகி வெளியேறினார். ரியான் ரிக்கெல்டனுக்கு பிறகு அடுத்து வந்த குயிண்டன் டிகாக், 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் இல்லாமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
4வது ஓவரில் ஏய்டன் மர்க்ரம் 7 ரன்களுடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து வந்த டோனி டி ஸோர்ஸி மற்றும் ப்ரீட்ஸ்கி ஜோடி நிலைத்து நின்று விளையாடி பங்காளி ஆட்டத்தில் 66 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து மெத்தியூ ப்ரீட்ஸ்கி நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். மார்கோ யான்செனும் அரைசதம் கடந்தார். ஆட்டத்தின் இறுதியில் பாஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஆனால் 49.2 ஓவர்களில் ஹர்ஷித் ரானா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகவே கடைசி விக்கெட்டையும் இழந்து, தென் ஆபிரிக்க அணி 332 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.






