என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பயிற்சியாளர் சேவாக் போல பேட்டிங் செய்ய சொன்னார்- அதிரடி பேட்டிங் குறித்து ரெஹான் நெகிழ்ச்சி
- இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றது.
- ரெஹன் வெறும் 7 பந்துகளில் 19 ரன்கள் குவித்தார்.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், வில் ஜாக்ஸ், ரேஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறஙகிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி வெற்றி பெற 19 பந்துகளில் 43 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலையில் 21 வயதான ரெஹான் அகமது களமிறங்கினார். அப்போது பால்கனியில் அமர்ந்திருந்த இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம், 'வாக்கி-டாக்கி' மூலம் கீழே இருந்த வீரர்களுக்கு ஒரு தகவலை அனுப்பினார்.
அதில், "ரெஹானிடம் போய் சேவாக்கை போல பேட்டிங் செய்யச் சொல்லுங்கள்" என்று மெக்கல்லம் கூறியுள்ளார்.
பயிற்சியாளரின் இந்த அறிவுரையைக் கேட்ட ரெஹான், அதே பாணியில் களத்தில் புகுந்து விளையாடினார். வெறும் 7 பந்துகளில் 19 ரன்கள் (அதில் இரண்டு பிரம்மாண்ட சிக்சர்கள் அடங்கும்) குவித்து, ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பினார். இறுதியில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றது.
போட்டிக்குப் பிறகு ரெஹான் அகமது கூறுகையில்:-
"பயிற்சியாளர் அந்த செய்தியை ஒரு நகைச்சுவையாகத்தான் அனுப்பினார். ஆனால், முந்தைய நாள் பயிற்சியின் போது நேராக சிக்சர் அடிக்க நான் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அதையே களத்திலும் செயல்படுத்தினேன்" எனத் தெரிவித்தார்.






