search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பும்ரா - கபில் தேவ்
    X
    பும்ரா - கபில் தேவ்

    பெங்களூர் டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு- கபில்தேவ் சாதனையை சமன் செய்த பும்ரா

    கபில்தேவ்வும் 29 டெஸ்டுகளில் 8 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார். இதன்மூலம் அவரது சாதனையை பும்ரா சமன் செய்தார்.
    பெங்களூர்:

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவாக பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 109 ரன்னில் சுருண்டது. பும்ரா 5 விக்கெட்டும், அஸ்வின், முகமது ‌ஷமி தலா 2 விக் கெட்டும் வீழ்த்தினார்கள்.

    143 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கைக்கு 447 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    முதல் இன்னிங்சில் 92 ரன் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 2-வது இன்னிங்சில் 67 ரன் எடுத்தார். ரி‌ஷப் பண்ட் அதிரடியாக ஆடி 31 பந்தில் 50 ரன் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். ஜெயவிக்ரமா 4 விக்கெட்டும் , எமுல்டெனியா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    447 ரன் இலக்குடன் ஆடிய இலங்கை நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்து இருந்தது. திரிமானே ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்தில் அவுட் ஆனார். கேப்டன் கருணாரத்னே 10 ரன்னிலும், குஷால் மெண்டீஸ் 16 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இலங்கை வெற்றிக்கு மேலும் 419 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட் இருக்கிறது.

    இந்த டெஸ்டிலும் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றுகிறது.

    நேற்றைய போட்டியில் ரி‌ஷப்பண்ட்டும், பும்ராவும் புதிய சாதனை படைத்தனர்.

    ரி‌ஷப்பண்ட் 28 பந்துகளில் அரை சதத்தை தொட்டார். இதன்முலம் கபில்தேவ்வின் 40 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்தார். 1982-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் கபில் தேவ் 30 பந்தில் அரை சதம் அடித்து இருந்தார்.

    இந்திய வீரர்களில் அதி வேகத்தில் டெஸ்டில் அரை சதம் அடித்து இருந்த அவரது சாதனையை ரி‌ஷப் பண்ட் முறியடித்து உள்ளார்.

    பும்ரா இந்திய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டை எடுத்தார். 29-வது டெஸ்டில் அவர் 8-வது முறையாக 5 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார்.

    வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தலா 2 முறையும், ஆஸ்திரேலியா, இந்தியாவில் ஒருமுறையும் அவர் 5 விக்கெட்டை எடுத்துள்ளார்.

    கபில்தேவ்வும் 29 டெஸ்டுகளில் 8 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார். இதன்மூலம் அவரது சாதனையை பும்ரா சமன் செய்தார்.

    நேற்றைய போட்டிக்கு பிறகு பும்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரி‌ஷப் பண்ட் வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பி உள்ளார். அவர் இயற்கையாகவே ஆக்ரோ‌ஷமாக பேட்டிங் செய்யக் கூடியவர். ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாக விளையாட முடியாது. ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக ஆடும் திட்டம் உண்டு.

    அவரது அதிரடியான ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக அமையும். இந்திய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு பும்ரா கூறினார்.

    Next Story
    ×