search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    கடைசிவரை பெங்களூர் அணிக்காக விளையாடுவேன்- விராட் கோலி

    கடைசி ஓவர் வரை போராடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதுதான் தங்களது அணியின் அடையாளம் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.
    ஷார்ஜா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியதால் விராட் கோலியின் கனவு கலைந்தது.

    ஷார்ஜாவில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு 139 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 33 பந்தில், 39 ரன் (5 பவுண்டரி) எடுத்தார். சுனில் நரீன் 21 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி பெங்களூர் அணிக்கு நெருக்கடி கொடுத்தார். பெர்குசன் 2 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர் சுப்மன்கில் 18 பந்தில் 29 ரன்னும் (4 பவுண்டரி) வெங்கடேஸ் அய்யர், சுனில் நரீன் தலா 26 ரன்னும் எடுத்தனர். முகமது சிராஜ், ஹர்சல் படேல், யசுவேந்திர சாகல் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த தோல்வியால் பெங்களூர் அணி வெளியேற்றப்பட்டது. இதனால் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வீராட் கோலியின் கனவு கலைந்தது.

    இந்த போட்டி தொடரில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடியதால், பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது எலிமினேட்டரில் தோற்று வெளியேறி உள்ளது.

    இந்த ஐ.பி.எல். போட்டியோடு விராட் கோலி பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இனி வரும் ஐ.பி.எல். போட்டிகளில் அவர் கேப்டனாக பணியாற்ற மாட்டார்.

    எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது. போட்டிக்கு பிறகு அந்த அணி கேப்டன் விராட் கோலி சோகத்துடன் வெளியே வருவதை படத்தில் காணலாம்.


    இந்த நிலையில், போட்டிக்கு பிறகு விராட் கோலி கூறியதாவது:-

    பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் நான் ஒரு வீரராக கடைசி வரை விளையாடுவேன். அந்த அணிக்காக விசுவாசமாக இருப்பேன். என்னை பொருத்தவரை விசுவாசம் முக்கியமானது.

    பெங்களூர் அணியில் விளையாடும் இளம் வீரர்கள் நம்பிக்கையுடனும், சுதந்திரமாகவும் விளையாடும் கலாச்சாரத்தை நான் உருவாக்க முயற்சித்துள்ளேன். இதேபோன்ற கலாச்சாரத்தைத்தான் நான் இந்திய அணியிலும் உருவாக்கி இருக்கிறேன்.

    என்னால் முடிந்த அளவு சிறப்பாக அணிக்காக செய்திருக்கிறேன். இதற்கான எதிர்வினை பதில் எவ்வாறு இருக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால் ஆர்.சி.பி அணிக்காக 120 சதவீத உழைப்பை ஒவ்வொரு முறையும் வழங்கி இருக்கிறேன்.

    அடுத்து ஒரு வீரராகவும் இதை நான் செய்வேன். அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் மறுசீரமைப்பதும், மறுகட்டமைப்பை உருவாக்குவதும் முக்கியமானது.

    நான் வேறு ஏதாவது அணியில் விளையாடுவேன் என்று கருதவில்லை. கடைசியாக ஆடும் வரை ஆர்.சி.பி. அணிக்காக விளையாடுவேன்.

    மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியின் சுனில் நரீன், வருண், ‌ஷகிப் ஆகிய 3 சுழற்பந்து வீரர்களும் கட்டுக்கோப்பாக பந்து வீசி ஆதிக்கம் செலுத்தினர். நேர்த்தியாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் நடுப்பகுதிகளில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

    எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி வரை போராடினோம். பேட்டிங்கும் மோசமாக அமையவில்லை. ஒட்டுமொத்தமாக நாங்கள் அடுத்த சுற்றுக்கு செல்ல தகுதியானவர்கள்.

    கடைசி ஓவர் வரை போராடியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுதான் எங்களது அணியின் அடையாளம். கிறிஸ்டியன் ஓவரில் 22 ரன்கள் கொடுத்தது தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

    பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இரு ஓவர்களில் அதிகமான ரன்களை கொடுத்ததும் வெற்றி வாய்ப்பை பாதித்தது.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் இறுதி ஆட்டத்துக்குள் நுழையும் 2-வது அணி எது என்பது நாளை தெரியும். ஷார்ஜாவில் நடைபெறும் ‘குவாலிபயர் 2’ ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றிபெறும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும். சென்னை அணி டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இறுதிப் போட்டி வருகிற 15-ந்தேதி துபாயில் நடக்கிறது.
    Next Story
    ×