search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி
    X
    டோனி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2022-ம் ஆண்டு வரை டோனி ஆடுவார் - தலைமை செயல் அதிகாரி தகவல்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2022-ம் ஆண்டு வரை டோனி விளையாடுவார் என சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருந்து வருகிறார். எல்லா சீசன்களிலும் அணியை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு அழைத்து சென்ற பெருமை டோனிக்கு உண்டு. ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கும் 13-வது ஐ.பி.எல். போட்டிக்கு 39 வயதான டோனி தயாராகி வருகிறார். டோனி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் நேற்று அளித்த ஒரு பேட்டியில்

    ‘இந்த ஆண்டு மட்டுமின்றி அடுத்த ஆண்டிலும் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அனேகமாக 2022-ம் ஆண்டு கூட அவர் சென்னை அணிக்காக விளையாடுவார். டோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்டார் என்பதை ஊடகம் மூலமே அறிகிறேன். ஆனால் டோனி குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஏனெனில் தனது பொறுப்பு என்ன? தன்னையும், அணியையும் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும்’ என்றார்.

    இதே கருத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வாட்சனும் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘டோனி இன்னும் விளையாடுவதை விரும்புகிறார். அவர் எப்போதுமே மதிப்புமிக்க வீரர் தான். அவரது திறமையையும், வெளிப்படுத்தும் கடின முயற்சியையும் பார்க்கும் போது அவரால் 40 வயதை கடந்தும் விளையாட முடியும். அவர் தனது உடல்தகுதியை சிறந்த முறையில் கவனித்துக் கொள்கிறார். நான் டோனியின் தீவிர ரசிகர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவோ அல்லது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலோ அவர் தொடர்ந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.
    Next Story
    ×