search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1983-ல் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்
    X
    1983-ல் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்

    உலக கோப்பையை வென்ற 37-வது ஆண்டு தினம்: பைனலில் பெரிய ஸ்கோரை தவறவிட்டேன்- ஸ்ரீகாந்தின் நினைவலைகள்

    இறுதிப் போட்டியில் மிகப்பெரிய ஸ்கோரை தவறவிட்டேன் என்று ஸ்ரீகாந்த் 1983 உலக கோப்பை குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
    கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீசை 43 ரன்னில் வீழ்த்தி முதல் உலக கோப்பையை இந்தியா வென்றது. 184 ரன் இலக்கை எடுக்க முடியாமல் அந்த அணியை 140 ரணில் இந்திய வீரர்கள் சுருட்டினர்.

    ஜூன் மாதம் 25-ந்தேதி இந்திய அணி உலக கோப்பை வென்ற தினமாகும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத மகத்தான நாள் இதுவாகும். இந்தியா உலக கோப்பையை வென்று இன்றுடன் 37-வது ஆண்டு முடிகிறது.

    இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆவார். அவர் 57  பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ரன்கள் எடுத்தார்.

    உலக கோப்பை வென்ற நினைவலைகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தது. இதனால்  இந்த இலக்கை எளிதில் "சேஸ்" செய்துவிடுவார்கள் என்று நினைத்தோம்.

    அப்போது கேப்டன் கபில்தேவ் எங்களிடம் ‘‘நாம் 183 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி விட்டோம்.  இருப்பினும் முழுத் திறமையை வெளிப்படுத்தி போராட வேண்டும். வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுவிடக்கூடாது’’ என்றார். அவர் அளித்த இந்த ஊக்கமான வார்த்தைகள் போட்டியில் சாதிக்கத் தூண்டியது. புதிய வரலாறு படைக்க முடிந்தது.

    இறுதிப்போட்டியில் நான் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க நல்ல வாய்ப்பு இருந்தது. அதை தவற விட்டது இன்னும் என் மனதில் இருக்கிறது.

    நான் சிறிய தவறை செய்துவிட்டேன்.. அதிகமான நம்பிக்கையினால் எனது விக்கெட்டை பறிகொடுத்தேன். ராபர்ட்ஸ் பந்தை பவுண்டரிக்கு அடித்த நான் மால்கம் மார்சலுக்கு எல்.பி.டபிள்யூ ஆனேன். நேரடியாக வந்த பந்தில் மோசமான முறையில் ஆட்டம் இழந்தேன். அடுத்த பந்துக்காக காத்திருந்துருக்க வேண்டும். கபில்தேவ் ஓடிச்சென்று பிடித்த கேட்ச் இறுதிப்போட்டியில் திருப்புமுனையாகும். 

    ஸ்ரீகாந்த்

    உலக கோப்பையை வென்றது இந்திய கிரிக்கெட்டுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அப்போது கிரிக்கெட் உலகில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன.

    இறுதிப்போட்டிக்கு முந்தைய தினம் இந்திய அணி நிர்வாகிகள் எங்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் இறுதிப் போட்டி பற்றி கவலைப்பட வேண்டாம். போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும் உங்களுக்கு ரூ. 25 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றனர்.

    மேலும் இறுதிப் போட்டியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை சாம்பியன் அங்கிகாரத்துடன் களம் இறங்கியது.

    இவ்வாறு  ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
    Next Story
    ×