search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்
    X
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

    மீண்டும் ஒரு சூப்பர் ஓவரில் இந்தியா அசத்தல்: நியூசிலாந்துக்கு ஏமாற்றம்

    வெலிங்டனில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா 14 ரன்னை சேஸிங் செய்து வெற்றி பெற்றது.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா மணிஷ் பாண்டேயின் (50 அவுட் இல்லை) அரைசதத்தால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் மந்தமாக உயர்ந்தது. 5-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் மார்ட்டின் கப்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 22 ரன்கள் எடுத்திருந்தது.

    2-வது விக்கெட்டுக்கு கொலின் முன்றோ உடன் விக்கெட் கீப்பர் சைபெர்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. கொலின் முன்றோ 38 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி விளையாடிய விதத்தை பார்க்கும்போது நியூசிலாந்து எளிதில் வெற்றிபெறும் என்ற நிலையில் இருந்தது.

    இந்நிலையில்தான் 12-வது ஒவரின் 4-வது பந்தை பவுண்டரி லைன் அருகே அடித்துவிட்டு  இரண்டாவது ரன்னுக்கு மெதுவாக ஓடினார் கொலின் முன்றோ. ஷர்துல் தாகூர் பவுண்டரி லைனில் இருந்து விக்கெட் கீப்பருக்கு துல்லியமாக வீசமாட்டார் என்ற நினைப்பில் அப்படி ஓடினார். அப்போது விராட் கோலி பந்தை இடையிலேயே பிடித்து, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஸ்டம்பை தகர்த்தார். இதனால் முன்றோ 47 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் மூலம் வெளியேறினார். அப்போது நியூசிலாந்து 96 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த ப்ரூஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் சைபெர்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நியூசிலாந்து வெற்றியை நோக்கிச் சென்றது.

    நியூசிலாந்து அணிக்கு கடைசி 18 பந்தில் 18 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சைபெர்ட் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் பும்ரா 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி இரண்டு ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

    19-வது ஓவரை நவ்தீப் சைனி வீசினார். மிகவும் சிறப்பாக வீசிய சைனி நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். முதல் பந்தை ராஸ் டெய்லர் தூக்கி அடிக்க ஷ்ரேயாஸ் அய்யர் மிகவும் சிறப்பான வகையில் கேட்ச் பிடித்தார். அடுத்து மிட்செல் களம் இறங்கினார். இவர் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடைசி நான்கு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது.

    3-வது பந்தை பவுன்சராக வீசினார். இந்த பந்தை மிட்செல் அடிக்க தவறினார். ஆனால் ‘பை’ மூலம் ஒரு ரன் எடுக்க ஓடினர். அப்போது விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் சைபெர்ட்டை ரன்அவுட் ஆக்கினார். இதனால் கடைசி மூன்று பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த தாகூர், ஐந்தாவது பந்தில் மிட்செல்-ஐ அவுட்டாக்கினார். இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க நியூசிலாந்து அணி 165 ரன்களே எடுத்தது.

    இரு அணிகளின் ஸ்கோரும் சமன் ஆனதால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 13 ரன்கள் அடித்தது. பின்னர் 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். டிம் சவுத்தி பந்து வீசினார்.

    கேஎல் ராகுல் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். 3 பந்தில் நான்கு ரன் தேவை என்ற நிலையில் விராட் கோலியுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். 4-வது பந்தில் இரண்டு ரன்கள் அடித்த விராட் கோலி ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

    ஏற்கனவே ஹாமில்டனில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியிலும் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 2-வது முறையாக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என வெற்றி பெற்றுள்ளது.
    Next Story
    ×