search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுரவ் கங்குலி
    X
    சவுரவ் கங்குலி

    டெஸ்ட் போட்டி நான்கு நாட்களாக குறைப்பு: ஐசிசி முடிவுக்கு முன்னதாகவே பதில் கூற இயலாது- கங்குலி

    டெஸ்ட் போட்டியின் நாட்களை நான்காக குறைக்கும் ஐசிசி முடிவுக்கு முன்கூட்டியே பதில் கூற இயலாது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது 5 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அதை முழுமையாக 4 நாள் கொண்ட போட்டியாக மாற்றுவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசீலிக்க முன்வந்துள்ளது.

    உலக அளவிலான பெரிய போட்டிகளை (சர்வதேச கிரிக்கெட் தொடர்) அதிகமாக நடத்த ஐ.சி.சி. விரும்புகிறது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய செல்வாக்குமிக்க கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    ஆண்டுதோறும் ஐ.சி.சி. தொடர் அட்டவணையில் இடம் பிடித்தால், ஏற்கனவே ஒப்புக் கொண்ட இரு நாட்டு தொடர் பெருமளவில் பாதிக்கப்படும் என்று கூறி ஐ.சி.சி.யின் திட்டத்தை ஏற்க இந்தியா மறுத்து விட்டது. இதையடுத்து 2023-ல் இருந்து 2031-ம் ஆண்டு வரையிலான வருங்கால போட்டி அட்டவணையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாளை 5-ல் இருந்து 4 ஆக குறைப்பது குறித்து ஐ.சி.சி-யின் கிரிக்கெட் கமிட்டி விரைவில் ஆலோசிக்க உள்ளது.

    4 நாள் டெஸ்ட் போட்டி என்பது ஒன்றும் புதிய யோசனை கிடையாது. பரீட்சார்த்த முயற்சியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து-அயர்லாந்து இடையே 4 நாள் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. 2017-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே மோதிய போட்டியும் 4 நாள் கொண்டதாக இருந்தது.

    இவ்வாறு நடத்தப்படும் போது இந்த போட்டியை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஐசிசி கருதுகிறது.

    ஏற்கனவே பிசிசிஐ-க்கும் ஐசிசி-க்கும் இடையே பிரச்சனை இருந்து வரும் நிலையில், ஐசிசி-யின் இந்த முடிவு இருநாடுகளுக்கு இடையிலான தொடரை பாதிக்கும். மேலும், வருமானம் வெகுவாக குறையும் என்பதால், இதுகுறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    ஐசிசி-யின்பரிலீசனை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ‘‘முதலில் நாங்கள் ஐசிசி-யின் பரிந்துரையை முழுவதுமாக பார்க்க வேண்டும். முதலில் அது வரட்டும். அதன்பின் நாங்கள் அதை பார்க்க வேண்டும். தற்போது பதில் சொல்வது மிகவும் முன்கூட்டியே சொல்வதாகும். இதுகுறித்து தற்போது கருத்து கூற இயலாது’’ என்றார்.
    Next Story
    ×