search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பின்வரிசை வீரர்கள் ரன் குவிப்பது அவசியம்: விராட் கோலி சொல்கிறார்
    X

    பின்வரிசை வீரர்கள் ரன் குவிப்பது அவசியம்: விராட் கோலி சொல்கிறார்

    உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் பின்வரிசை வீரர்கள் ரன் குவிப்பது அவசியம் என்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்க இன்னும் 4 தினங்களே உள்ளது. வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை14-ந்தேதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நடக்கிறது.

    உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு 10 நாடுகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தன. 1983 மற்றும் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்துடன் இந்திய அணி நேற்று மோதிய பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

    முதலில் விளையாடிய இந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ரன்னில் சுருண்டது. 8-வது வீரராக களம் இறங்கிய ஜடேஜா 50 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி 2 சிக்சர்), ஹர்திக் பாண்டியா 30 ரன்னும் எடுத்தனர். போல்ட் 4 விக்கெட்டும், நீசம் 3 விக்கெட்டும், சவுத்தி, கிராண்ட்ஹோம், பெர்குசன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.



    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டன் டெய்லர் 71 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னும் எடுத்தனர். பும்ரா, சாஹல், ஜடேஜா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    நாங்கள் திட்டமிட்டு ஆடவில்லை, எங்கள் முன்பு கடுமையான சவால்கள் இருந்தன. இங்கிலாந்தில் உள்ள சில இடங்களில் தட்ப வெப்பநிலை, ஆடுகள தன்மை ஆகியவற்றை எதிர்பார்க்கவில்லை. 50 ரன்னில் 4 விக்கெட் என்ற நிலை 180 ரன்னை இலக்காக நிர்ணயித்தது நல்ல முயற்சியாகும்.

    உலகக்கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் முன்னிலை பேட்ஸ்மேன்கள் ஆடாதபோது பின்கள வீரர்கள் ரன் குவிப்பது அவசியமானது. இதற்கு அவர்கள் இங்குள்ள மைதானத்தில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஜடேஜா நம்பிக்கை அளிக்கும் வகையில் பின்கள வரிசையில் ஆடினார். எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, ‘‘வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை பெற்று தந்தனர். இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றார். இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை 28-ந்தேதி சந்திக்கிறது. அதே தினத்தன்று நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை சந்திக்கிறது.

    நேற்று நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 12 ரன்னில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான்- வங்காளதேசம், தென்ஆப்பிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×